ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் 50 மீ., 'ரைபிள் புரோன்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ககன் நரங், செயின் சிங் தோல்வி அடைந்தனர்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இன்று நடந்த ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீ., 'ரைபிள் புரோன்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் ககன் நரங், செயின் சிங் பங்கேற்றனர்.
இதில் ககன் நரங் 623.1 புள்ளிகள் பெற்று 13வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் செயின் சிங் 619.6 புள்ளிகளுடன் 36வது இடம் பிடித்தார். இப்பிரிவில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால், இந்திய வீரர்கள் இருவரும் இறுதி சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறினர்.
துப்பாக்கி சுடுதலில் இந்தியா தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னணி வீரர்கள் உள்பட துப்பாக்கி சுடுதலில் பங்கேற்ற வீரர்கள் அனைவரும் தோல்வியை தழுவி வருகின்றது இந்திய ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.