ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழா வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆசிய நாடுகளில் இது வரை இல்லாத அளவில் பிரமாதமாக, பிரம்மாண்டமாக தொடக்க விழாவை நடத்தியது இந்தோனேசியா.
அந்த நிகழ்வில் என் மனதை சிந்திக்க வைத்த சில விஷயங்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]
இந்த விஷயங்கள் எல்லாம் பேசுவதற்கும், எழுதுவதற்கும் நன்றாக இருக்கும், நடைமுறையில் விளையாட்டு என்பது ஒரு பொழுதுபோக்கு, பங்கேற்பவர் வென்றால் புகழ், பணம் இதெல்லாம் கிடைக்கும் என கூறுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், விளையாட்டு இதை மட்டுமே கொடுப்பதில்லை. வேறு சில விஷயங்களையும் கொடுக்கும் என்பதை சொல்லும் சில கணங்கள் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நாடுகள் அறிமுகம் செய்யும் போது கடந்து சென்றன.
இந்த முறை தென்கொரியா மற்றும் வடகொரியா, ஒரே நாடாக இணைந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் “ஒருங்கிணைந்த கொரியா” என்ற பெயரில் சில குழு போட்டிகளில் பங்கேற்க உள்ளன. மற்ற போட்டிகளில் தனி நாடுகளாக பங்கேற்றாலும், நாடுகள் அறிமுக விழாவில், ஒருங்கிணைந்த கொரியாவாக இரண்டு நாட்டைச் சேர்ந்த வீரர்களும் கைகோர்த்து வந்த காட்சி காண்பவர்களை மெய் சிலிர்க்க வைத்தது.
இதுதான் இந்த கோடிக்கணக்கான பணம் செலவழித்து நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளின் முதல் நோக்கம் என்பது போல இருந்தது அவர்களின் இணைப்பு. விளையாட்டுக்காக மட்டும் இல்லாமல், விரைவில் கொரியா என்ற ஒரே அடையாளமாக இருநாடுகளும் இணைந்தால் உலகமே நிம்மதி அடையும்.
அடுத்தது, சிரியா நாட்டை சேர்ந்த மிகச்சிறிய வீரர்கள் குழு அறிமுகம் செய்யப்பட்ட போது, கிட்டத்தட்ட அனைவரின் மனதிலும் ஒரு சுமை, அழுத்தம் ஏற்பட்டது. கடந்த வருடங்களில் சிரியா நாட்டில் இருந்து வந்த போர் செய்திகள், பச்சிளம் குழந்தைகள் காயங்களோடும், உயிரற்றும் இருந்த புகைப்படங்களை கண்டு மனம் பதைபதைத்த நிமிடங்கள் கண் முன் மீண்டும் வந்து போனது.
குறிப்பாக, சிரிய வீரர்கள் புன்னகையோடு தோன்றியதைப் பார்த்து, ஏதோ ஒரு குற்ற உணர்வு நெஞ்சை தாக்கியது. அதே சமயம், இவர்கள் மீண்டு விடுவார்கள், அதற்குச் சான்று இந்த சிறிய குழு, சிரியா நாட்டில் இருந்து அத்தனை காயங்களையும், வடுக்களையும் மீறி இந்தோனேசியா வந்தடைந்தது தான் என மனம் சமாதானம் அடைந்தது.
விளையாட்டு பணம், புகழ் மட்டுமல்ல, கடந்த கால துயரங்களை மறக்கவும், எதிர்காலத்துக்கான நம்பிக்கையை அளிக்கவும் வல்லது.