பயிற்சிகள் மேற்கொள்ளும் ஹிமா தாஸ்
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு மையத்தில் தங்கியிருந்து தன்னுடைய பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ். முதுகில் ஏற்பட்ட காயம், கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள ஊரடங்கு மற்றும் பயிற்சிகளுக்கு இடையில் இவருடைய தினசரி பொழுதுகள் கழிந்து வருகின்றன.
ஒலிம்பிக்கிற்கு தயாராகும் ஹிமா தாஸ்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், முதுகு வலியை மீறி பயிற்சிகளை மேற்கொள்ள தனக்கு கால அவகாசம் கிடைத்துள்ளதாக ஹிமா தாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிசியோதெரபி பயிற்சிகளை தான் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் தற்போது தன்னுடைய முதுகுவலி குறைந்து காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
காயம் ஏற்படுவது சகஜம்
விளையாட்டு வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம்தான் என்று தெரிவித்துள்ள அவர், இந்த நிலையில் தன்னுடைய பயிற்சியாளர் மற்றும் இந்திய தடகள பயிற்சி மையத்தின் தீர்மானத்தின்படி தான் செயல்படுவேன் என்றும் கூறியுள்ளார். கடந்த 2018ல் நடைபெற்ற உலக அன்டர் -20 சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தவர் ஹிமா தாஸ்.
நிகழ்ச்சியை கொடுக்க கோரிக்கை
தன்னுடைய பயிற்சியாளர் மற்றும் பெடரேஷனின் முயற்சியால் தான் தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், ஏதாவது ஒரு நிகழ்ச்சியை தனக்கு கொடுத்தால், அதில் ஓடி, ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவேன் என்றும் ஹிமா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தனது காயம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டத்திற்கு ஹிமா தகுதி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு விளையாட்டு உலகில் நிலவுகிறது.
திறன் மதிப்பீடு செய்ய முடியாது
திங் எக்ஸ்பிரஸ் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஹிமா தாஸ், தான் ஒன்றிரண்டு போட்டிகளில் பங்கேற்றால் மட்டுமே, தன்னுடைய தற்போதைய திறன் குறித்து தான் மதிப்பிட முடியும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு மாதங்களாக வீட்டில் முடங்கியுள்ள நிலையில், தற்போது திறன் மதிப்பீட்டை செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.