சென்னை : 2019 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கி, நான்கு ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவர் 2019 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வென்ற தங்கப்பதக்கமும் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் தலைநகர் தோஹாவில் 2019ஆம் ஆண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. அந்த தொடரில் இந்தியா சார்பில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்று இருந்தார் கோமதி மாரிமுத்து.
அப்போது கோமதி மாரிமுத்துவுக்கு நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் அவர் அனபாலிக் ஸ்டீராய்டு நண்ட்ரோலன் என்றும்எனும் ஊக்கமருந்தை பயன்படுத்தியது உறுதிபடுத்தப்பட்டது. அவரிடம் எடுக்கப்பட்ட பி மாதிரிகளிலும் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
100 வயது.. உலகின் மிக வயதான இந்திய கிரிக்கெட் வீரர் காலமானார்.. பிராட்மேனுக்கு நெருக்கம்
கோமதி மாரிமுத்து கடந்த ஆண்டு மார்ச் 18 முதல் மே 17 வரை பங்கேற்ற அனைத்து போட்டிகளின் முடிவுகளையும் ரத்து செய்துள்ளது ஏஐயு. அவர் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பெற்ற தங்கப் பதக்கம் திரும்பப் பெறப்படுகிறது. அதே போல, தமிழக அரசு சார்பில் பெற்ற பதக்கங்கள், பண முடிப்பு ஆகியவற்றையும் திரும்பப் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோமதி மாரிமுத்து, ஏஐயு விதித்த இந்த தடைக்கு எதிராக மேல் முறையீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.