பாங்காக்: ஒலிம்பிக்கில் தனது பேரன் வெண்கலப் பதக்கம் வென்றதால் அதீத மகிழ்ச்சி அடைந்த பாட்டி, உற்சாக மிகுதியில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக மரணமடைந்தார்.
தாய்லாந்தைச் சேர்ந்தவர் 20 வயதான சின்பெட் குரூய்தாங். இவர் ரியோ ஒலிம்பிக் போட்டியில் 56 கிலோ எடைப் பிரிவு பளு தூக்குதலில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இந்தத் தகவலை பாங்காக்கில் உள்ள அவரது வீட்டினர் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக சின்பெட்டின் பாட்டிக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. பேரனுக்கு வெண்கலம் கிடைத்து விட்டது என்று உற்சாகமடைந்தார் அவர். அந்தக் கொண்டாட்டத்தின்போது திடீரென அவர் மயங்க விழுந்தார். அவரை உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். ஆனால் பாட்டி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதீத உற்சாகத்தால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும் டாக்டர்கள் கூறினர். இதனால் சந்தோஷத்தில் இருந்த குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.
84 வயதான பாட்டி சுபின் கோங்காப் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாகவே, தனது பேரன் நிச்சயம் பதக்கம் வெல்வான் என்று கூறியபடி இருந்தாராம். கடைசியில் பேரனை பதக்கத்துடன் பார்க்க முடியாமல் போய்ச் சேர்ந்து விட்டார் பாட்டி.