ஒன்றாக இணைவோம்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்மன்பிரீத் கவுர், தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால், இந்திய அணியை சிறப்பான இடத்திற்கு கொண்டு சென்றவர். அனைத்து ரசிகர்களின் கவனத்திற்கும் உள்ளானவர். ஊரடங்கால் இவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில், சமூக வலைதளம் இவருக்கு கைகொடுத்து வருகிறது.
ஹர்மன்பிரீத் கவுர் செய்தி
இந்நிலையில் உலக பூமி தினத்தையொட்டி இவர் விடுத்துள்ள செய்தியில், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார். நம்முடைய சுற்றுச்சூழல் மற்றும் பூமியை பாதுகாக்கும்வகையில், நாம் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் இந்த பூமி நம்முடைய வீடு, அதை இன்னலுக்கு உள்ளாக விடக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பந்தை பார்க்காமல் விளையாட்டு
இந்நிலையில், கிரிக்கெட்டை தவிர தனக்கு மற்ற வித்தைகளும் தெரியும் என்று நிரூபித்துள்ளார் கவுர். கண்ணாடி முன்பாக நின்றுக் கொண்டு, டம்ளர் ஒன்றின்மூலம், பந்தை அடித்து, அதை பார்க்காமலேயே, மீண்டும் டம்ளரில் பிடித்து மேஜிஷியனாக வித்தை காட்டுகிறார் கவுர். அதை பார்க்கும் கண்கள் ஆச்சரியத்தால் நிறைகிறது.
ரசிகர்களின் கேள்விக் கணைகள்
இந்த மேஜிக்கை செய்து இன்ஸ்டாகிராமில் அவர் வீடியோ வெளியிட்டதையடுத்து அவரது ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி தெளித்துள்ளனர். மேலும், இதை எப்படி செய்தார் என்றும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதேபோல கடந்த மாதத்தில் ஷ்ரேயாஸ் ஐயரும் மேஜிக் ஒன்றை நிகழ்த்தி ரசிகர்களை மகிழ்வித்தது குறிப்பிடத்தக்கது.