டெல்லி: 21 நாள் லாக்டவுன் மக்களை எந்த அளவுக்கு பக்குவப்படுத்தியிருக்கிறது என்பது வரும் நாட்களில்தான் தெரியும். ஆனால் இந்த காலத்தை விதம் விதமாக அவர்கள் கழித்து வருகின்றனர்.
அது மட்டும் உண்மை. அந்த வகையில் காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரான டேபிள் டென்னிஸ் வீரர் ஹர்மீத் தேசாய் இதை வைத்து பல புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு வருகிறாராம்.
வழக்கம் போல எல்லா வீரர், வீராங்கனைகளையும் போல இவரும் வீட்டோடு முடங்கிக் கிடக்கிறார். ஆனாலும் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். வீட்டில் இருப்பதும் கூட நன்றாகத்தான் இருக்கிறது என்று கூறும் அவர் டேபிள் டென்னிஸிடமிருந்து விலகியிருப்பது அரிய அனுபவம் என்றும் சிலாகிக்கிறார்.
2018 கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தவர் தேசாய். சூரத்தைச் சேர்ந்த இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் வீட்டிலேயே முடங்கியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், 21 நாள் லாக் டவுனை அரசு அமல்படுத்தியுள்ளது. இதைப் பயன்படுத்தி குடும்பத்தினருடன் நேரத்தைக் கழித்து வருகிறேன். நிறைய புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிகிறது. அம்மாவுக்கு சமையலில் உதவி செய்கிறேன். வாழ்க்கையில் பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முடிந்தது என்று கூறியுள்ளார்.
இப்படியெல்லாம் ஓய்வு ஒரு போதும் கிடைக்காது. விளையாடாமல் வீட்டினரோடு இருப்பது வித்தியாசமாக இருக்கிறது. அரசு விதிமுறையை எல்லோரும் பின்பற்றுங்கள். எல்லோரும் வீட்டிலேயே இருங்க. பாதுகாப்பாக இருங்க. அதுதான் அனைவருக்குமே நல்லது என்றும் கூறியுள்ளார் தேசாய். தேசாய் 2018ல் நடந்த ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் என்பது நினைவிருக்கலாம்.