சண்டிகர்: ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், ரோஹ்தக் மகரிஷி தயானந்தா பல்கலை கழகத்தின் மல்யுத்த பிரிவு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் இந்திய பங்கேற்பாளர்கள் சோபிக்காத நிலையில், முதலாவது பதக்கம் சாக்ஷி மாலிக்கிடமிருந்துதான் கிடைத்தது. மல்யுத்தத்தில் அவர் வெண்கலம் வாங்கி கொடுத்து நாட்டுக்கு கவுரவம் சேர்த்தார்.
சாக்ஷி மாலிக் மகளிர் ப்ரீஸ்டைல் 58 கிலோ எடைப் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான மல்யுத்தப் போட்டியில் 8-5 என்ற கணக்கில் கிர்கிஸ்தானின் டைனிபெகோவாவை வீழ்த்தி பதக்கம் வென்றார்.
சாக்ஷி மாலிக்கை கவுரவிக்கும் வகையில் ஹரியாணா மாநில அரசு ரூ. 2.5 கோடி பரிசு வழங்கியுள்ளது. அதேபோல் டெல்லி அரசு 1 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கின. பரிசுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஹரியாணா இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் அனில் விஜ், சாக்ஷி மாலிக்கின் சாதனையை மேலும் பாராட்டும் விதமாக அவரது சொந்த மாவட்டத்தில் உள்ள ரோஹ்தக் மகரிஷி தயானந்தா பல்கலை கழகத்தின் மல்யுத்த பிரிவு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார். அவரின் பயிற்சியாளருக்கும் பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.