டெல்லி: பின்லாந்தில் நடக்கும் சர்வதேச தடகள சம்மேளனத்தின் 20 வயதுக்குட்பட்டோருககான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த விவசாயியின் மகள் ஹீமா தாஸ்.
பின்லாந்தின் தம்பெரேவில் சர்வதேச தடகள சம்மேளனத்தின் 20 வயதுக்குட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கின்றன. இதில் நேற்று நடந்த 400 மீட்டர் ஓட்டத்தில் 51.46 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார் இந்தியாவின் ஹீமா தாஸ். அசாம் மாநிலம் நாகோவான் மாவடம் திங் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மகளான ஹீமா, இந்த முறை தங்கம் வெல்லக் கூடியவராக முதலில் இருந்தே கணிக்கப்பட்டார்.
400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றதன் மூலம், உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் 18 வயதாகும் ஹீமா தாஸ்.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் இந்தாண்டு ஏப்ரலில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 51.32 விநாடியில் கடந்து 6வது இடத்தைப் பிடித்தார் ஹீமா. அப்போது 20 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய சாதனையை அவர் புரிந்தார். அதன்பிறகு குவஹாத்தியில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் பிரிவில் 51.13 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார் ஹீமா.
2016ல் போலந்தில் நடந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான தடகளப் போட்டியில் ஈட்டி எறியும் பிரிவில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஹீமா பெற்றுள்ளார்.
உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் 2002ல் வட்டு எறிதலில் சீமா புனிமா வெண்கலம், 2014ல் வட்டு எறிதலில் நவ்ஜித் கவுர் தில்லான வெண்கலம் வென்றுள்ளனர். முதல் தங்கத்தை ஹீமா வென்றுள்ளார்.