டெல்லி: ஒலிம்பிக்கில் மெடல் வேண்டுமானால் எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று தொழிலதிபர் விஜய் மல்லையா பிரதமர் நரேந்திர மோடிக்கு டிவிட்டரில் யோசனை சொல்லி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
வங்கிகளுக்கு சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்துள்ள தொழிலதிபர் மல்லையா, நெருக்கடி காரணமாக இங்கிலாந்து தப்பி சென்றுள்ளார். அவருக்கு இந்திய நீதிமன்றங்கள் பிடிவாரண்ட் பிறப்பித்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில், சாத்தான் வேதம் ஓதுவதை போல, ஒலிம்பிக்கில் இந்தியா ஜெயிக்க, தலைமறைவு மல்லையா அட்வைஸ் செய்துள்ளார்.
டிவிட்டரில் இதுகுறித்து இன்று அவர் கூறியுள்ள கருத்தை பாருங்கள்: மேக் இன் இந்தியா, மோடியின் செல்ல திட்டம். ஒலிம்பிக் பதக்கங்களை வெல்ல வேண்டுமானால், சர்வதேச கட்டமைப்பு, உலகத்தரமுள்ள பயிற்சியாளர்களை நியமிக்க போதிய நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு மல்லையா டிப்ஸ் கொடுத்துள்ளார்.
PM Modi's pet is Make in India. Allocate generous resources, International infrastructure n World Class coaches to make Olympic medals too.
— Vijay Mallya (@TheVijayMallya) August 23, 2016
இதைப்பார்த்த நெட்டிசன்கள், அவரது டிவிட்டர் ஹேண்டிலுக்கு போய், "ஐயா.. நீங்கள் ஏமாற்றிய பணத்தை திருப்பி கொடுத்தால், நாங்கள் நல்ல கட்டமைப்பை பெற்றுவிடுவோம்" என கலாய்த்து வருகிறார்கள்.
விஜய் மல்லையா, ஓட்டப்பந்தையத்தில் பங்கேற்றிருந்தால் தங்கம் வென்றிருப்பார் என நெட்டிசன்கள் கிண்டல் செய்துவரும் நிலையில், தங்கம் வெல்வது எப்படி என்பது அவர் டிப்ஸ் கொடுத்துள்ளது காலக்கொடுமையன்றி வேறென்ன?