கிடைத்த முதல் தங்கம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியின் ஃபைனல்ஸ நேற்று (ஆக.7) நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மொத்தம் 12 வீரர்கள் கலந்துக்கொண்ட நிலையில் அவர்களுக்கு நீரஜ் சோப்ரா முதல் சுற்றில் இருந்தே சவாலாக திகழ்ந்தார். மொத்தம் 12 வீரர்கள் பங்கேற்ற இறுதிச்சுற்று, 6 சுற்றுகளாக நடத்தப்பட்டது. அதாவது மொத்தம் 6 வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. தனது முதல் சுற்றில் 87. 03 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி நீரஜ் சோப்ரா அசத்தினார். 2வது சுற்றில் 87.58 மீ தூரம் வீசி அசர வைத்தார். இதனால் முதல் 2 சுற்றுகளில் டாப் இடத்தில் இருந்தார். இதன் பின்னர் நடைபெற்ற 3,4, 5வது சுற்றுகளில் நீரஜ் சோப்ராவால் பெரியளவில் சோபிக்க முடியவில்லை. ஃபௌல்களே மிஞ்சியது. எனினும் சோப்ராவாவின் 87.58 மீட்டர் என்ற தூரத்தை எந்த ஒரு வீரராலும் தகர்க்க முடியவில்லை. இதனால் இறுதியில் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
6 கோடி ரொக்கம்
இந்த சாதனையைத் தொடர்ந்து, நீரஜ் சோப்ராவுக்கு பரிசு மழை குவிந்து வருகிறது. ஹரியானா முதல்வர் எம்.எல்.கட்டார் விடுத்த அறிவிப்பில், "ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, ரூ.6 கோடி ரொக்கப் பரிசும், முதல்நிலைப் பணியும், ஒரு குடியிருப்பு மனை குறைந்த விலையிலும் வழங்கப்படும்" என அறிவித்தார். பஞ்சாப் முதல்வர் அமரிந்தர்சிங் விடுத்த அறிவிப்பில், "ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பஞ்சாப் அரசு சார்பில் ரூ.2 கோடி ரொக்கப்பரிசு வழங்கப்படும். இந்தியாவுக்கான பெருமைக்கான தருணம்" எனத் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே 1 கோடி
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விடுத்த அறிவிப்பில் " ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும்" என அறிவித்தது. அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பரிசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அணி விடுத்த அறிவிப்பில், "ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவுக்கு சிஎஸ்கே அணி சார்பில் ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும். அவர் எறிந்த தொலைவைக் குறிப்பிட்டு 8758 என்ற எண்ணில் ஜெர்ஸி வழங்கப்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டது.
எக்ஸ்யுவி 700 சொகுசு கார்
இந்திய விமான நிறுவனமான இன்டிகோ நிறுவனம், "ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா 2021, ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் 2022 ஆகஸ்ட் 7-ம் தேதிவரை இன்டிகோ நிறுவனத்தில் ஓராண்டுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி பயணிக்கலாம்" எனத் தெரிவித்துள்ளது. மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா விடுத்த அறிவிப்பில், "ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா இந்தியா வந்தபின் அவருக்குப் புதிய எக்ஸ்யுவி 700 வகை சொகுசு கார் பரிசாக வழங்கப்படும்" என அறிவித்துள்ளார்.
100 ஆண்டுகளுக்குப் பின்
எலான் குழுமத்தின் தலைவர் ராகேஷ் கபூர் விடுத்த அறிவிப்பில், "நீரஜ் சோப்ராவுக்கு ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசு தங்கள் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். அதேபோல், மணிப்பூர் அரசும் பரிசு அறிவித்துள்ளது. "100 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக்கில் தடகளத்தில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது வரலாற்று நாள். ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவைப் பெருமைப்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதையடுத்து சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது" என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.