தவறிய பதக்க வாய்ப்பு
ரியோ ஒலிம்பிக் ஆடவர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபிநவ் பிந்த்ரா வெண்கலப் பதக்கத்தை நூலிழையில் நழுவவிட்டார். திங்கள்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் 16ஆவது ஷாட்டின் முடிவில் 163.8 புள்ளிகளுடன் உக்ரைனின் ஷெர்ஹி குல்லிஷுடன் சமநிலையில் இருந்தார் பிந்த்ரா.
4வது இடத்தில் பிந்த்ரா
அதன்பிறகு சற்று தடுமாறிய பிந்த்ரா, இறுதியில் 4வது இடத்தைப் பிடித்தார். இந்தப் போட்டியில் இத்தாலியின் நிக்கோலோ 206.1 புள்ளிகளுடன் தங்கமும், உக்ரைனின் குலிஷ் (204.6) வெள்ளியும், ரஷியாவின் விளாதிமிர் (184.2) வெண்கலமும் வென்றனர்.
தங்கமகனுக்கு தடுமாற்றம்
2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இதே பிரிவில் பிந்த்ரா தங்கம் வென்றார். ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற ஒரே இந்தியர் பிந்த்ரா. ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4வது இடத்தில் மட்டுமே வர முடிந்தது.
விரக்தியில் பிந்த்ரா
கண்களில் நீர் கசிய விரக்தியுடன் பேட்டியளித்து அவர், எனக்கு என்னுடைய வேலை என்ன என்பது நன்றாக தெரியும். அதற்காக அமைதியாக காத்திருந்தேன் என்றார். என்னுடைய எல்லா திறமையையும் பயன்படுத்தினேன். எனக்கு மிகச்சிறப்பான நாளாக அமைந்தது. ஆனால் அதற்கான பலனாக ஒரு பதக்கம் கூட கிடைக்காதது தான் வருத்தம் அளிக்கிறது.
ஓய்வு அறிவிப்பு
என்னுடைய ஓய்வுக்கு இது சரியான நேரம் இதுதான். இதை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை. இனிபொழுதுபோக்காக கூட துப்பாக்கியை தூக்க மாட்டேன். ஒலிம்பிக்கில் சாதிக்க என்னால் முடிந்த அளவு எல்லா முயற்சிகளையும் செய்துவிட்டேன். இப்படி முடிவு கிடைத்ததும் எனக்கு மகிழ்ச்சிதான் என்று கூறியுள்ளார்.
துப்பாக்கி விற்பனை
அடுத்ததாக என்ன செய்யவேண்டும் என்று இனிமேல்தான் யோசிக்கவேண்டும் என்றவர் பிறகு, ஓய்வு பெறுவது என்பது இறுதியான முடிவு. என்னுடைய துப்பாக்கியை விற்கப் போகிறேன். நீங்கள் வாங்கிக்கொள்கிறீர்களா? என்று சற்றே வேடிக்கையாகவும் செய்தியாளர்களிடம் பேசினார் பிந்த்ரா.