டெல்லி: இங்கிலாந்தை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் மைக்கேல் சோப்ரா இந்தியாவுக்காக ஆட வேண்டும் என்று முயற்சி செய்து வருவதாக கூறியுள்ளார்.
நியூகேஸ்டில் மற்றும் சுந்தர்லேண்ட் அணி ஸ்டிரைக்கரான மைக்கேல் சோப்ராவின் பூர்வீகம் இந்தியாவாம். 1950களில், அவரது தாத்தா காலத்தில் அக்குடும்பம், பஞ்சாப்பிலிருந்து இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்துள்ளது.
சர்வதேச கால்பந்தாட்ட கூட்டமைப்பான ஃபிபா விதிமுறைப்படி, மைக்கேல் சோப்ராவால் இந்தியாவுக்காக ஆட முடியும் என்பது இதில் சிறப்பு. இந்தியாவின் உள்நாட்டு கால்பந்தாட்ட தொடரான ஐஎஸ்எல் லீக்கில், சோப்ரா, கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்காக ஆட உள்ளார். பயிற்சியில் ஈடுபட்டுவரும் அவர் நிருபர்களிடம் தெரிவிக்கையில், தனக்கு இந்தியாவுக்காக ஆடும் எண்ணம் இருப்பதாகவும், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து வழக்கறிஞர்களிடம் பேசியுள்ளதாகவும், ஆனால், நினைத்ததைவிட அதிகமாக, நேரம் எடுக்கும் விஷயமாக இது இருப்பதாகவும் சோப்ரா தெரிவித்துள்ளார். இந்த முயற்சியில் தனது பிரிட்டீஷ் பாஸ்போர்ட்டை திருப்பி அளிக்கவும் ரெடியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
2014ம் ஆண்டு ஐ.எஸ்.எல் போட்டித்தொடரின்போது, கொல்கத்தா அணிக்காக சோப்ரா தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், காயம் காரணமாக கலமிறங்க முடியவில்லை. கடந்த ஆண்டு இவரை எந்த அணியும் தேர்ந்தெடுக்கவில்லை. இவ்வாண்டு கேரளா பிளாஸ்டர்ஸ் சோப்ராவை தங்கள் அணியில் சேர்த்துக் கொண்டுள்ளது.