பாங்காக்கில் நடைபெறுகிறது
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த அணிகளின் வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை காட்டி வருகின்றனர்.
உலக வில்வித்தை சம்மேளனத்தில் கீழ் போட்டி
இந்திய வில்வித்தை சம்மேளனம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் இந்த போட்டியில் இந்திய வீரர்கள் உலக வில்வித்தை சம்மேளன கொடியின் கீழ் பொதுவான வீரர்களாக பங்கேற்று ஆடி வருகின்றனர்.
தென்கொரியாவை வீழ்த்தி பதக்கம்
ஆண்களுக்கான ரிகர்வ் தனிநபர் பிரிவின் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தென்கொரிய வீரர் ஜின் ஹயெக் ஒக்கை எதிர்த்து விளையாடிய இந்திய வீரர் அதானு தாஸ், டைபிரேக்கரில் அவரை எதிர்கொண்டு வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தனதாக்கினார்.
6க்கு 2 புள்ளிகள் கணக்கில் வெற்றி
ரிகர்வ் ஆண்கள் அணி பிரிவில் சீனாவை எதிர்கொண்ட அதானு தாஸ், தருண்தீப் ராய் மற்றும் ஜெயந்தா தலுக்தார் ஆகியோர் 6க்கு 2 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலத்தை உறுதி செய்தனர்.
தீபிகா குமாரி தலைமையிலான அணி வெற்றி
ரிகர்வ் பெண்கள் அணி பிரிவில் தீபிகா குமாரி, பாம்பய்லா தேவி, அங்கிதா பகத் அடங்கிய அணி ஜப்பானை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை இந்தியாவிற்கு சொந்தமாக்கினர்.
தங்கம் அல்லது வெள்ளி கிடைக்க வாய்ப்பு
இதேபோல காம்பவுண்ட் ஆண்கள் அணி பிரிவில் அரையிறுதியில் அபிஷேக் வர்மா, ரஜத் சவுஹான், மோகன் பரத்வாஜ் ஆகியோர் இறுதி போட்டிக்கும் பெண்கள் அணி பிரிவு மற்றும் கலப்பு அணி பிரிவு ஆகியவை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதை அடுத்து இந்த பிரிவுகளில் இந்தியாவிற்கு வெள்ளி அல்லது தங்கம் உறுதியாகியுள்ளது.
இந்தியாவிற்கு பெருமை
திங்கட்கிழமை நடைபெற்ற கலப்பு பிரிவில் தீபிகா குமாரியுடன் இணைந்து விளையாடிய அதானு தாஸ் வெண்கலம் வென்றார். இதேபோல அவர் தனிநபர் பிரிவிலும் ஆண்கள் அணி பிரிவிலும் வெண்கலம் வென்று ஹாட்-டிரிக்காக 3 வெண்கலத்தை பெற்றுள்ளார்.