பெரும் எதிர்பார்ப்பு
இந்த நிலையில், மிக மிக முக்கியமான ஹாக்கி போட்டி இன்று நடைபெற்றது. பெண்கள் பிரிவில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சிறப்பான புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றால் தான் ஒலிம்பிக் காலிறுதி ஹாக்கி போட்டிக்கு இந்தியா தகுதிப் பெற முடியும் என்பதால், இந்த போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
தென்.ஆ., பதிலடி
போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே.. அதாவது நான்காவது நிமிடத்திலேயே இந்தியாவின் வந்தனா கட்டாரியா முதல் கோல் அடித்து இந்தியாவின் கோல் கணக்கை துவக்கி வைத்தார். பிறகு முதல் கால் பகுதி ஆட்டத்தின் இறுதி நேரத்தில் தென்னாப்பிரிக்கா ஒரு கோல் அடிக்க ஆட்டம் 1-1 என்ற சமநிலை பெற்றது. பிறகு இரண்டாவது கால் பகுதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் மீண்டும் வந்தனா அற்புதமான 2வது கோல் அடித்தார். இதனால் 2-1 என்று இந்தியா லீடிங் பெற்றது.
பின் தொடர்ந்த தென்.ஆ.,
சற்றும் சளைக்காத தென்னாப்பிரிக்கா, இரண்டாவது கால் பகுதி ஆட்டம் முடியும் தருவாயில் மீண்டும் கோல் அடித்து 2-2 என்று ஆட்டத்தை மீண்டும் சமநிலைக்கு கொண்டு வந்தது. பிறகு, மூன்றாவது கால் பகுதி நேரத்தில் இந்தியாவின் நேஹா, அணியின் 3வது கோல்-ஐ பதிவு செய்ய 3-2 என்று திரும்பவும் இந்தியா முன்னிலை பெற்றது. தென்னாப்பிரிக்கா வீராங்கனைகள் சும்மா இருப்பார்களா? மூன்றாவது கால் பகுதி ஆட்டம் முடிவதற்கு 5 நிமிடங்களே இருந்த போது, மீண்டும் அந்த அணி கோல் அடிக்க 3-3 என்று சமநிலை பெற்றது.
த்ரில் வெற்றி
நெக் டூ நெக் ஆட்டம் அனல் பறந்தது. இந்தியா ஒரு கோல் அடித்தால், தென்னாப்பிரிக்கா உடனே பதில் கோல் அடிக்க, யார் வெற்றிப் பெறப் போகிறார்கள் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆட்டம் முடிய இன்னும் 15 நிமிடங்களே மீதமிருக்க இந்தியாவின் வந்தனா ஹாட்ரிக் கோல் அடித்து அசத்த, இந்தியா 4-3 என்று முன்னிலை வகித்தது. பிறகு, தடுப்பாட்டத்தில் இந்தியா முழு கவனமும் செலுத்த, மேற்கொண்டு தென்னாப்பிரிக்காவால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. இதனால், இந்திய மகளிர் அணி 4-3 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றிப் பெற்றது.
காலிறுதி வாய்ப்பு
எனினும், இந்திய அணி இப்போது வரை காலிறுதி ஆட்டத்தை உறுதி செய்யவில்லை. குரூப் சுற்றின் மற்றொரு இறுதி ஆட்டத்தில் அயர்லாந்து, இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதுகின்றன. இதில், அயர்லாந்து அணி இங்கிலாந்திடம் டிரா ஆனாலோ அல்லது தோற்றாலோ இந்திய அணி காலிறுதிக்கு தகுதிப் பெற்றுவிடும். ஒருவேளை அயர்லாந்து இங்கிலாந்தை வீழ்த்திவிட்டால், இந்திய மகளிர் அணி ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறிவிடும்.