கோல்ட் கோஸ்ட்: 21வது காமன்வெல்த் போட்டியில் மல்யுத்தம் பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற 12 பேரும் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். இந்தப் பிரிவில் மட்டும் 5 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் கிடைத்துள்ளது.
காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடக்கிறது. இதில் 10வது நாளான இன்று, இதுவரை இந்தியா 25 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலம் என, 57 பதக்கங்களை குவித்துள்ளது. அட்சய திருதியை நாளான இன்று மட்டும் இந்தியா 8 தங்கம் உள்பட 15 பதக்கங்களை வென்றது.
இந்த காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் அதிகபட்சம் 16 பதக்கங்கள் கிடைத்தன. அதற்கடுத்து மல்யுத்தத்தில் 5 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என, 12 பதக்கங்கள் கிடைத்தன. அதிலும் போட்டியில் பங்கேற்ற 12 பேரும் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் 57 கிலோ எடைப் பிரிவில் ரகுல் அவாரே முதல் தங்கத்தை வென்றார். சுஷில் குமார், 74 கிலோ பிரிவில் தங்கம் வென்றார். இது அவருக்கு ஹாட்ரிக் தங்கமாகும். ஆடவர் 65 கிலோ பிரிவில் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார். இன்று நடந்த போட்டிகளில் ஆடவர் 125 கிலோ பிரிவில் சுமித் மாலிக், மகளிர் 50 கிலோ பிரிவில் வினேஷ் போகத் தங்கம் வென்றனர்.
மகளிர் 53 கிலோ பிரிவில் பபிதா குமாரி மகளிர் 57 கிலோ பிரிவில் பூஜா தண்டா, ஆடவர் 97 கிலோ பிரிவில் மவுசம் காத்ரி வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். மகளிர் 76 கிலோ பிரிவில் கிரண் பிஷ்னோய், மகளிர் 68 கிலோ பிரிவில் திவ்யா காக்ரன், மகளிர் 62 கிலோ பிரிவில் சாக் ஷி மாலிக், ஆடவர் 86 கிலோ பிரிவில் சோம்வீர் காதியான் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.