சிட்னி: உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் இந்தியாவும் ஒன்று என்று மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 14ம்தேதி தொடங்க உள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து இந்த உலக கோப்பை தொடரை நடத்த உள்ளன.
இதனிடையே விவியன் ரிச்சர்ட்ஸ் கூறியதாவது: இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் எப்போதுமே உலக கோப்பையை வெல்ல தகுதியான அணிகள் பட்டியலில் இருந்து நீங்கியதில்லை. அதே நேரம் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியாவும் இந்த பட்டியலில் உள்ளது. இம்மூன்று அணிகளும் என்னுடைய ஃபேவரைட் அணிகளாகும்.
நியூசிலாந்து அணியை கணிக்க முடியாது. அது வீறு கொண்டு எழுந்தால் பிற அணிகளால் தாக்குப்பிடிக்க முடியாது. பாகிஸ்தானை பொறுத்தளவில் அபாயகரமான அணியாக உள்ளது. அந்த அணி திடீரென எழுச்சியோடு ஆடும், திடீரென மொத்தமாக சுருண்டுவிடும். அந்தந்த நாளில் அந்த அணி எப்படி ஆடுகிறது என்பதை பொறுத்துதான் பாகிஸ்தானை கணிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணி 1975ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கோப்பையை வென்றது. அதேபோல 1979ம் ஆண்டு 2வதாக நடந்த உலக கோப்பை தொடரிலும் அந்த அணியே சாம்பியன் ஆனது. 1983ம் ஆண்டில், மேற்கிந்திய தீவுகள் இறுதி போட்டி வரை வந்து இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இந்தியா சாம்பியன் ஆனது. இம்மூன்று போட்டிகளின்போதுமே விவியன் ரிச்சர்ட்ஸ் மேற்கிந்திய தீவுகளுக்காக விளையாடினார்.
உலக கோப்பை தொடர்களில், மொத்தம் 23 போட்டிகளில் விளையாடியுள்ள ரிச்சர்ட்ஸ், அதில், 1103 ரன்களை குவித்தவர். சராசரி ரன் விகிதம் 63.31 ஆகும். அதில் இருந்தே அவர் எப்படிப்பட்ட அபாயகரமான பேட்ஸ்மேன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.