flyweight பிரிவில்
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 52 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டி இன்று (ஜுலை.31) நடைபெற்றது. இதில், இந்தியாவின் அமித் பங்கால் கொலம்பியா நாட்டின் மார்டினஸ் ரிவாஸை எதிர் கொண்டார். இந்த flyweight பிரிவில் அமித் பங்கால் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அமித் நிச்சயம் இந்தப் போட்டியில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கம்பேக் கொடுத்த கொலம்பியா
இந்த ஆண்களுக்கான flyweight round 16 ஆட்டத்தின் முதல் சுற்றில், அமித் முன்னிலை வகித்தார். ஆனால், அடுத்தடுத்த சுற்றில் கொலம்பியா வீரர் அபாரமான கம்பேக் கொடுத்தார். அவரது பல பன்ச்கள் நேர்த்தியாக இருந்தது. சரியாக இடத்தில் குத்து விழுந்தது. இதனால், அவர் தொடர்ந்து முன்னிலை பெறத் தொடங்கினார். மூன்றாவது மற்றும் கடைசி சுற்றிலும் கொலம்பியா வீரர் புள்ளிகளை அள்ள, 4-1 என்ற கணக்கில் மார்டினஸ் வெற்றிப் பெற்றார். அதேசமயம், அமித் பங்கால் ஒலிம்பிக் கனவு முடிவுக்கு வந்தது.
கமல்ப்ரீத் கவுர்
இதன் மூலம், ஒலிம்பிக்கின் 9வது நாளான இன்று, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் அடுத்தடுத்து ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. வில்வித்தைல் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய போட்டியில், இந்தியாவின் அட்டானு தாஸ் தோல்வி அடைந்து வெளியேறினார். அதேபோல், பெண்கள் வட்டு எறிதலில் இந்தியாவின் சீமா புனியா இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறினார். அதேசமயம், வட்டு எறிதலில் மற்றொரு இந்திய வீராங்கனையான கமல்ப்ரீத் கவுர் 2ம் இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
வெண்கலப்பதக்கம்
முன்னதாக நேற்று நடைபெற்ற மகளிர் 69 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் லோவ்லினா, சீன தைபேயின் நியன் செனை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். லோவ்லினா குத்துச்சண்டை பிரிவில் நிச்சயம் மெடல் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர் தோற்றாலும் வெண்கலப்பதக்கம் உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.