ரியோடி ஜெனிரோ: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று, அசத்தி உள்ளார்.
பிரேசிலில் தற்போது உலக கோப்பைக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், மூத்தோர்களுக்கு 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இறுதிப்போட்டி நடந்தது. பரபரப்பான இந்த போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் பங்கேற்றார்.
போட்டியின் முடிவில் அவர் தங்கம் வென்று சாதனை படைத்தார். வளரிவான், இறுதிப் போட்டியில் 251.7 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்து தங்கத்தை வென்றிருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக 2வது பிரிட்டனின் சியோனட் மின்டோஸ் பெற்றார். அவர் 250.6 புள்ளிகள் எடுத்தார்.
உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதலில், மூத்தோர்களுக்கு 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டி இளவேனில் வளரிவான் முதல்முறையாக தங்கத்தை தட்டிச் சென்றிருக்கிறார். இவர் துப்பாக்கிச்சுடுதலில் தங்கம் வெல்வது இது முதல்முறை அல்ல.
ஏற்கனவே, ஜூனியர் பிரிவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார். இந்த போட்டி சில மாதங்களுக்கு முன்பு ஜெர்மனியில் நடைபெற்றது. தங்கம் வென்ற இளவேனில் வளரிவானுக்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.