வெள்ளிப்பதக்கம்
மகளிர் பளுதூக்குதலில் 49 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை மீராபாய் சானு, ஸ்நாட்ச் பிரிவில் 87 கிலோ தூக்கினார். அதன்பின்னர் நடைபெற்ற க்ளின் அண்டு ஜெர்க் பிரிவில் 115 கிலோ தூக்கினார். இதன் மூலம் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். சீனாவின் ஜிஹுய் ஹூ 210 கிலோ மொத்த எடை தூக்கி தங்கம் பதக்கம் வென்றார்.
5 வருடங்களுக்கு முன்பே
வாழ்வில் கடும் இன்னல்களை, சவால்களை சந்தித்த மீராபாய், 5 வருடங்களுக்கு முன்பே விளையாட்டு போட்டிகளை விட்டு விலகியிருக்க வேண்டியவர். மீரா மெடல் வென்ற பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவரது தாய், "2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் தோல்வி பெற்ற போதே இனி எந்தவித போட்டிகளிலும் கலந்து கொள்ள போவதில்லை எனக் கூறினார். ரியோ ஒலிம்பிக்கின் போது மீரா எனக்கு தொலைப்பேசியில் அழைத்து முடிவை கூறினார். அவர் தோல்வியடைந்துவிட்டதை கேட்டு மொத்த குடும்பமும் வேதனை அடைந்தோம்.
பெருமிதம்
எனினும் மீராவிடம் நாங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தினோம். அவருக்கு நாங்கள் ஆறுதல் அளித்தோம். "சிக்கல் வந்துக்கொண்டே இருக்கும். ஆனால் பாதியில் விட்டுவிட்டு ஓடிவிடக்கூடாது. எனவே தொடர்ந்து முயற்சி செய்" என நம்பிக்கை கொடுத்தோம். அதன் விளைவாகவே வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது" என்று பெருமிதம் பொங்க பேசியிருந்தார்.
கண்ணீர் விட்டு
இந்நிலையில், ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த மீராபாய் சானு, நாடு திரும்பிய போது கோலாகலமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவரை வரவேற்க பெற்றோர்களும் சென்றிருந்தனர். அப்போது தனது தாயைக் கண்ட மீராபாய், உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் விட்டு வெடித்து அழுதார். இது உணர்வுப்பூர்வமான சந்திப்பாக அமைந்தது.
மாறிய வாழ்க்கை
மீராபாய் சானு தனது தாயார் சாய்கோம் ஓங்பி டோம்பி லீமா மற்றும் தந்தை சாய்கோம் கிருதி மெய்டி ஆகியோரை கட்டிப்பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தியதை காண முடிந்தது. அப்போது பாதுகாப்பு படையினர் மீராபாயை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து நின்றனர். ஒரு ஒலிம்பிக் மெடல் மீராபாயின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றிவிட்டது.