6 பதக்கம் அள்ளிய ஜோபி மாத்யூ
இதில், ஜோபி மாத்யூ என்ற வீரர், இரண்டு தங்கம், மூன்று வெள்ளி, ஒரு வெண்கலம் என, 6 பதக்கங்களை வென்றுள்ளார். பாட்மின்டன் இரட்டையர், பாட்மின்டன் ஒற்றையர், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், பளு தூக்குதல் பிரிவுகளில் இவர் பதக்கம் வென்றுள்ளார்.
அருணாச்சலம் நளினி
"இந்தப் போட்டிகள் எங்களுக்கு மிகவும் முக்கியமாகும். எங்களை போன்ற உயரம் குறைந்தவர்களுக்காக நடத்தப்படும் இந்த சர்வதேசப் போட்டி, ஒலிம்பிக் போட்டிக்கு இணையானது. அதில், பலமுறை, பதக்கமேடையில் ஏறியது பெருமையளிப்பதாக உள்ளது" என்கிறார், தமிழகத்தைச் சேர்ந்த அருணாச்சலம் நளினி. இவர் ஒரு தங்கம் உள்பட, ஐந்து பதக்கங்களை வென்றுள்ளார்.
விளையாட்டுத் துறையின் பாரபட்சம்
ஆனாலும், நமது விளையாட்டுத் துறையினரின் பாரபட்சம் இவர்களையும் வாட்டி எடுத்துள்ளது. "போட்டியில் பங்கேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்களே செய்து கொண்டோம். சிலர் கடன் வாங்கியும், சொத்துக்களை விற்றும், இந்தப் போட்டியில் பங்கேற்றோம்" என்கிறார் மூன்று தங்கம் வென்ற ரஞ்சனா.
சுதந்திர தின விழா
இந்தப் போட்டிகள் முடிந்த பிறகு, டொரன்டோவுக்கு திரும்பிய, நமது வெற்றி வீரர்கள், அங்கு நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்றனர். அங்கு நடந்த அணிவகுப்பின்போது, இவர்கள் திடீரென கலந்து கொண்டது, சுதந்திர தினவிழாவில் பங்கேற்ற இந்தியர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
தங்க வசதி இல்லை
உயரம் குறைந்தோருக்கான ஒலிம்பிக்கில் நமது வீரர்களின் சாதனையை தெரிந்து கொண்ட கனடாவைச் சேர்ந்த சில நல்ல உள்ளங்கள், அவர்களை சுதந்திர தின விழாவுக்கு அழைப்பு விடுக்கும்படி, நமது தூதரகத்தை கேட்டுக் கொண்டது. டொரன்டோ வந்த வீரர்கள், தங்குவதற்கு வசதி கிடைக்கவில்லை. சில நல்ல உள்ளங்கள் அவர்களுக்கு தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் ஏற்பாடு செய்தன.
கவுரவத்திற்கு நன்றி
சுதந்திர தின விழாவில் தாங்கள் கவுரவிக்கப்பட்டதற்கு, நமது வீரர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். ஆனால், பல கஷ்டங்கள் இருந்தபோதும், ஒலிம்பிக் போட்டியின்போது, ஒவ்வொரு நாளும், நமது தேசியக் கொடியை பறக்க வைத்த அவர்களுக்கு தான் நாம் நன்றி கூற வேண்டும்.