டெல்லி: 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தாலும், மிகவும் வலுவான அமெரிக்காவுக்கு கடுமையான சவாலை இந்திய ஜூனியர்கள் கொடுத்துள்ளனர்.
பிபா 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நேற்று துவங்கின. போட்டியை நடத்தும் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் மிகவும் வலுவான அமெரிக்காவை சந்தித்தது.
கால்பந்து உலக வரைபடத்தில் மைக்ரோஸ்கோப் வைத்தாலும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இந்தியா உள்ளது. அதே நேரத்தில் இந்த உலகக் கோப்பை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது.
மிகப் பெரிய கோல் கணக்கில் இந்திய அணியை அடித்து துவைத்து எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணி ஒருசில சிறு தவறுகளை மட்டுமே செய்தது. அமெரிக்காவுக்கு சவால்விடும் வகையில், இந்திய அணியின் தடுப்பாட்டம் அமைந்திருந்தது. ஜிதேந்திர சிங், ஒரு பெனால்டு வாய்ப்பை கொடுத்ததில் இருந்து பாடம் கற்றிருப்பார்.
கடந்த 12 மாதங்களில் இதே அமெரிக்க அணி, பல்வேறு வலுவான அணிகளை சுழட்டி சுழட்டி அடித்தது. 2016 அக்டோபரில் கோஸ்டாரிகாவை 4-0 என்ற கணக்கில் வென்றது. கடந்த நவம்பரில் போர்ச்சுகல்லை 7-1 என்ற கணக்கில் துவம்சம் செய்தது.
இவ்வாறு வலுவான அணிகளையே திணறடித்த அமெரிக்கவிடம், 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தாலும், எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பான ஆட்டத்தை இந்திய வீரர்கள் வெளிப்படுத்தினர். பல நேரங்களில் அமெரிக்க அணியை திக்குமுக்காட வைத்தனர்.
நேற்று நடந்த மற்ற ஆட்டங்களில். ஏ பிரிவு கானா 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வென்றது. பி பிரிவில் நடந்த ஆட்டங்களில், நியூசிலாந்து, துருக்கி 1-1 என்ற டிரா செய்தன. பராகுவே 3-2 என்ற கணக்கில் மாலியை வென்றது.
இந்தியா அடுத்த 9ம் தேதி டெல்லியில் நடக்கும் ஆட்டத்தில் கொலம்பியாவையும், 12ம் தேதி டெல்லியில், கானாவையும் சந்திக்கிறது.
சி பிரிவுில் இன்று நடக்கும் ஆட்டங்களில் ஜெர்மனி - கோஸ்டாரிகா, ஈரான் - குய்னா மோதுகின்றன. டி பிரிவில் பிரேசில் - ஸ்பெயின், வடகொரியா - நைஜர் மோதுகின்றன.