குவஹாத்தி: கோப்பா அமெரிக்கா கால்பந்துப் போட்டி பக்கம் ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களின் கால்களும் திரும்பி உட்கார்ந்திருக்கும் நிலையில் மறுபக்கம் சத்தம் போடாமல் ஆசிய கோப்பை தகுதிப் போட்டிகளில் இந்தியா கலக்கியுள்ளது.
லாவோஸுக்கு எதிரான போட்டியில் 6-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்ற இந்தியா ஆசியக் கோப்பைப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. ஸ்டிரைக்கர் ஜேஜே லால்பெக்குலா 2 கோல்கள் அடித்து இந்தியாவுக்கு வலிமையூட்டினார்.
இந்தியா இதுவரை கால்பந்துப் போட்டிகளில் பெற்ற மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்றாகவும் இந்தப் போட்டி அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் ஆரம்பத்தில் இந்தியா 0-1 என்ற கணக்கி் பின் தங்கியிருந்தது. போட்டி தொடங்கிய 15 நிமிடத்திலேயே முன்னிலை பெற்று விட்டது லாவோஸ். ஆனால் இந்தியா அதன் பின்னர் புயலாக மாறி லாவோஸ் என்ற லட்டை நொறுக்கி பூந்தியாக்கி விட்டது.
அதிலும் 7 நிமிடஙத்திற்குள் இந்தியா 3 கோல்கள் அடித்து லாவோஸை அதிர வைத்து விட்டது. ஜேஜே 2 கோல்களும், சுமீத் பஸ்ஸி, சந்தேஷ் ஜிங்கன், முகம்மது ரபீக், புல்காங்கோ கார்டோஸா ஆகியோர் தலா ஒரு கோலடித்தும் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தனர்.
தகுதிச் சுற்றுப் போட்டியில் லாவோஸை இந்தியா 2வது முறையாக தோற்கடித்துள்ளது. ஏற்கனவே ஜூன் 2ம் தேதி வியட்நாமில் நடந்த முதல் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. தற்போது குவஹாத்தியில் நடந்த 2வது போட்டியில் 6-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஆசியக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.