பெல்ஜியம் வெற்றி
உலக சாம்பியன் பெல்ஜியம் அணியை எதிர்த்து களமாடியது இந்தியா. போட்டி தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே பெல்ஜியம் அணி முதல் கோல் அடித்து 1 - 0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதனால் ஆட்டத்தின் கியரை மாற்றிய இந்திய அணியில், ஏழாவது நிமிடத்தில் ஹர்மன்தீப் சிங் முதல் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1 - 1 என சமநிலை பெற்றது. பிறகு, இந்தியாவின் நட்சத்திர வீரர் மன்பிரீத் சிங் எட்டாவது நிமிடத்தில் அடுத்த கோல் அடிக்க, இந்தியா 2-1 என்று முன்னிலை பெற்றது. ஆனால், கடைசி 15 நிமிடங்களில் பெல்ஜியம் அணிக்கு அடுத்தடுத்து ஃபெனால்டி வாய்ப்புகளை கிடைக்க, தொடர்ந்து 3 கோல்களை அடித்து அந்த அணி 5 - 2 என வலுவான முன்னிலைக்கு சென்றது சென்றது. ஆட்டமும் இந்திய அணியின் பிடியில் இருந்து நழுவிப் போனது. முடிவில், பெல்ஜியம் 5 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 41 வருடங்களுக்கு பிறகு அரையிறுதி வரை முன்னேறிய இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, சோகத்துடன் வெளியேறியது.
பிரதமர் ஆறுதல்
பிரதமர் மோடி இந்த ஆட்டத்தை டிவியில் நேரலையாக பார்த்து ரசித்திருக்கிறார். தோல்விக்கு பிறகு அவர் தனது ட்விட்டரில், "வெற்றியும், தோல்வியும் வாழ்வில் சகஜமான ஒன்று. டோக்கியோ ஒலிம்பிக்கில் நமது இந்திய அணி முழுமையான திறமையையும் வெளிப்படுத்தியது. அவர்களின் அடுத்த போட்டிக்கு (வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி) வாழ்த்துக்கள். ஹாக்கி வீரர்களை நினைத்து இந்தியா பெருமைக்கொள்கிறது" என தெரிவித்துள்ளார்.
பிரதமருடன் சந்திப்பு
அதுமட்டுமின்றி, ஹாக்கி அணி மற்றும் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களயும் வரும் சுதந்திர தினத்தன்று (ஆக.15) செங்கோட்டைக்கு சிறப்பு விருந்திராக பிரதமர் மோடி அழைத்திருக்கிறார். அப்போது, ஒவ்வொரு வீரர்களையும் பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்து உரையாடவிருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெண்கலப்பதக்கம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டி களத்தில் இருந்துதான் இந்திய அணி வெளியேறியதேத் தவிர, ஒலிம்பிக்கில் இருந்து அல்ல. ஆம்! வரும் ஆகஸ்ட் 5ம் தேதி, வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்திய ஹாக்கி அணி விளையாடுகிறது. இதில், இந்தியாவுடன் மோதப் போவது யார் தெரியுமா? ஜெர்மனி. யெஸ். இந்தியாவும், ஜெர்மனி அணியும் தான் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் மல்லுக்கட்ட உள்ளனர். இன்று நடந்த மற்றொரு ஹாக்கி அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணியிடம் 1-3 என்ற கணக்கில் ஜெர்மனி தோற்றது.
இந்தியா சாம்பியன்
ஸோ, இந்தியாவும் - ஜெர்மனியும் நேருக்கு நேர் வெண்கலப்பதக்கத்துக்காக மோதவுள்ளன. ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியாவும் ஜெர்மனியும் 11 ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் வென்றுள்ளது. 3 ஆட்டங்கள் டிரா ஆகியுள்ளது. எனினும், மற்ற தொடர்களில் அதாவது இரு நாடுகளுக்கு இடையேயான தொடர், சாம்பியன்ஸ் டிராபி, ஹாக்கி உலக லீக் போன்றவற்றில் இந்தியாவை ஒரு படி மேல் சென்று ஜெர்மனி டாமினேட் செய்திருக்கிறது. சமீபத்தில் கடந்த 2021 மார்ச் மாதம் இரு அணிகளும் மட்டும் மோதிய 2 போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடர் 1-1 என்று டிராவானது. இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா? கடந்த, 1936ம் ஆண்டு பெர்லினில் நடந்த ஒலிம்பிக் ஹாக்கி இறுதிப் போட்டியில் மோதியது இந்தியாவும், ஜெர்மனியும் தான். அதில், இந்திய அணி 8-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை துவம்சம் செய்து மெகா வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. அந்த இறுதிப் போட்டி எந்த தேதியில் நடந்தது தெரியுமா? ஆகஸ்ட்.15.