டெல்லி : இந்திய ராணுவ தலைமை அதிகாரி பிபின் ராவத், இந்திய வீரர்கள் ஆசிய விளையாட்டில் காட்டியது வெறும் ட்ரைலர் தான், முழு படமும் 2020 ஒலிம்பிக் போட்டிகளின் போது வெளியாகும் என கூறி இருக்கிறார்.
ஆசிய விளையாட்டில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆசிய விளையாட்டு வரலாற்றில் இந்தியா தன் மிக அதிகபட்ச பதக்க எண்ணிக்கையை இந்த முறை எட்டியது.
இதில் ராணுவம் சார்பாக சில விளையாட்டுகளுக்கு பயிற்சி அளித்து ஆசிய போட்டிகளுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய ராணுவ தலைமை அதிகாரி ராவத், "நான் மொத்த வீரர்கள், பயிற்சியாளர்களுக்கும் என் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். பதக்கம் வென்றவர்கள் மட்டுமல்ல. சிலர் பதக்கம் வென்றுள்ளனர். சிலர் எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை. நான் அவர்கள் தொடர்ந்து உழைப்பார்கள் என நம்புகிறேன்"
"ஆசிய விளையாட்டு ஒரு ட்ரைலர்தான். நீங்கள் முழு படத்தையும் ஒலிம்பிக்கில் பார்ப்பீர்கள். அதுதான் நமது ஒலிம்பிக் லட்சியம். ராணுவம் சார்பாக 66 வீரர்கள், 7 பயிற்சியாளர்கள் இந்த ஆசிய விளையாட்டில் பங்கேற்றார்கள். நாம் 11 பதக்கங்கள் வென்றுள்ளோம். நான் அதிகம் எதிர்பார்த்தேன். ஆனால், இதனால் மனமுடைந்து விடவில்லை. அவர்கள் நன்றாக பயிற்சி செய்து மேலும் நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என எனக்கு தெரியும்" என கூறினார் ராவத்.
மேலும், வீரர்களுக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்கள், உபகரணங்கள் ஆகியவை அளித்து ராணுவம் பயிற்சி வழங்கும். ஒலிம்பிக் போட்டிகளுக்கு இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், அவர்கள் நிறைய பயிற்சி பெறலாம் எனவும் கூறினார் பிபின் ராவத்.