முக்கிய காரணம்
கடைசியாக 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்தியா ஆண்கள் ஹாக்கியில் தங்கம் வென்றது. அதன்பின் இப்போதுதான் மீண்டும் பதக்கம் வெல்கிறது. இந்த போட்டியில் இந்தியாவிற்காக சிம்ரான்ஜீத் சிங் 17 மற்றும் 34வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஹர்திக் சிங் 27வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஹர்மன்பிரீத் சிங் 29வது நிமிடத்தில் கோல் அடித்தார். ருபிண்டர் பால் சிங் 31வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதில் இந்தியாவின் வெற்றிக்கு சிம்ரான்ஜீத் சிங் மற்றும் கீப்பர் ஸ்ரீஜேஷ் முக்கியமான காரணமாக இருந்தனர்.
போட்டியின் ஹீரோ
இன்னொரு பக்கம் திமோர் ஓர்ஸ் 2வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். நிக்லாஸ் வெல்லன் 24வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். பெனெடிக் 25வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். லூகாஸ் 48 நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இறுதியில், இந்திய அணி வெற்றிப் பெற, வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர்விட்டு அழுதனர். 41 வருடங்களுக்கு பின் மெடல் வாங்கிய உற்சாகத்தில் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி கண்ணீர்விட்டனர். முக்கியமாக இன்று கிட்டத்தட்ட 10 பெனால்டி கார்னர் மற்றும் கோல்களை கச்சிதமாக தடுத்து நிறுத்திய இந்திய அணியின் கீப்பர் ஸ்ரீஜேஷ் போட்டிக்கு பின்பாக கோல் போஸ்ட் மேல் ஏறி நின்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த போட்டியின் முக்கிய ஹீரோ அவர் தான் என்றால் மிகையாகாது.
சமர்ப்பணம்
இந்த போட்டி வெற்றிக்கும் பின் பேட்டி அளித்த இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங், இந்த வெற்றி எங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. எங்களுடைய வெற்றியை இந்தியாவின் முன்கள பணியாளர்களுக்கு, மருத்துவர்களுக்கு, கொரோனாவை எதிர்த்து போராடும் ஒவ்வொரு நபருக்கும் சமர்ப்பணம் செய்கிறோம்.
அருமையான வெற்றி
இந்நிலையில், இந்திய அணியின் வெற்றியை உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் இந்த மகத்தான ஹாக்கி வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து வாழ்த்து தெரிவித்துள்ள மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், "இந்தியாவிற்கு வெண்கலம் வென்றுக் கொடுத்த ஹாக்கி அணியின் ஒவ்வொரு வீரருக்கும் வாழ்த்துக்கள்! இது ஒரு அருமையான கடினமான வெற்றி ... போட்டி முடியும் தருணத்தில் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுத்த ஃபெனால்டி கார்னர் கோல்கள் அற்புதமானது. முழு இந்தியாவும் பெருமைப்படுகிறது!" என்று ட்வீட் செய்துள்ளார்.
மகிழ்ச்சி
இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் தனது டீவீட்டில், " இந்திய ஹாக்கிக்கு ஒரு முக்கிய நாள். 3-1 என்ற கணக்கில் பின்தங்கிய பிறகு, இந்தியா போராடி மீண்டு வந்து 5-3 என்ற கணக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளோம்" என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
கம்பீர் சர்ச்சை ட்வீட்
இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில், "வாழ்த்துக்கள் இந்தியா. 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் வெண்கலம் வென்றுள்ளோம். என்ன ஒரு மேட்ச் இது. இந்திய ஹாக்கிக்கு இது பெருமையான தருணம்" என்று ட்வீட் செய்துள்ளார். இதில், முன்னாள் வீரரும், பாஜக எம்.பியுமான கெளதம் கம்பீர் வெளியிட்ட பதிவிட்ட கருத்துக்கள் தான் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர், "1983, 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை மறந்து விடுங்கள். ஹாக்கியில் வென்ற இந்த பதக்கம் எந்த உலகக் கோப்பையையும் விட பெரியது" என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றியை விட இந்த ஹாக்கி அணியின் வெண்கலம் சிறந்தது என்று கூறியிருக்கிறார். ரசிகர்கள் சிலர், இது தேவையில்லாத ஒப்பீடு என்றும், தோனி மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை இவ்வாறு கூறியுள்ளதாகவும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.