நொய்டா : இளம் கோல்ப் வீரர் அர்ஜூன் பாட்டி, தன்னுடைய 102 கோப்பைகளை விற்று கொரோனா வைரசுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ளார்.
தான் கடந்த 8 ஆண்டுகளாக சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் கோல்ப் விளையாடி பெற்ற 102 கோப்பைகளை விற்று அவர், 4.30 லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
ரூ.60 லட்சத்திற்கு ஏலம் போன சிங்கிள் ஜெர்சி... காரணம் இருக்குங்க
இந்த நேரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதே முக்கியம் என்று அவர் கூறியுள்ளார். எதிர்காலத்தில் அதிகமான கோப்பைகளை வெற்றி கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த இளம் கோல்ப் வீரர் அர்ஜூன் பாட்டி, கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இவ்வாறு இவர் வென்றுள்ள 102 கோப்பைகளை தற்போது விற்கும் முடிவிற்கு அவர்வந்துள்ளார்.
கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் பல கொடுமையான காட்சிகளை கண்முன் கொண்டுவந்துள்ளது. இந்தியாவிலும் இதன் கோரத்தாண்டவம் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆயினும் ஊரடங்கு உள்ளிட்டவற்றின் மூலம் மத்திய அரசு அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், இந்த நேரத்தில் அரசுக்கு கைகொடுக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, பல்வேறு தரப்பினர் மற்றும் விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து நன்கொடை அளித்து வருகின்றனர். இதையொட்டி கோல்ப் வீரர் அர்ஜூன் பாட்டியும் 4.30 லட்சம் ரூபாய் நிதியுதவியை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.
இதில் விஷேசம் என்னவென்றால், தான் கடந்த 8 ஆண்டுகளாக விளையாடி ஜெயித்த 102 கோப்பைகளை விற்று இவர் இந்த நிதியை அளித்துள்ளார். இதில் 3 உலக கோல்ப் சாம்பியன்ஷிப் கோப்பைகளும் அடக்கம். கோப்பைகளை எப்பொழுது வேண்டுமானாலும் ஜெயித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ள அர்ஜூன், இந்த நேரத்தில் அரசுக்கு கைகொடுப்பது மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார்.
இதனிடையே அர்ஜூன் பாட்டியின் இந்த செயலுக்கு பிரதமர் மோடியும் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய குடிமக்களின் இந்த உணர்வு, கொரோனாவை வெற்றி கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.