கட்டாக்: இந்திய அதி வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் காயமடைந்துள்ளது இந்திய தேர்வு குழுவினருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று கட்டாக்கில் நடந்தது. இந்திய அணியில் முகமது ஷமி இல்லாத நிலையில், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், வருண் ஆரோன் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் களம் கண்டனர்.
உமேஷ் யாதவ், வருண் முதல் ஜோடியாக பந்து வீச்சை தொடங்கினர். இருவரது பந்து வீச்சிலும் அனல் பறந்தது. இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளர்களின் வேகம் 140 கிலோ மீட்டரை தொடாது என்ற அலட்சியத்துடன் ஆட வந்த இலங்கை வீரர்களுக்கு, இவ்விருவரின் பந்து வீச்சை எதிர்கொள்வதே பெரும் சிரமமாக மாறிப்போனது. ஏனெனில் இருவருமே 145 கிலோமீட்டருக்கும் மேல் வேகத்தில் பந்து வீசினர்.
வருண் ஆரோன் தனது முதல் ஓவரின் கடைசி பந்தை 152.5 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார். தில்ஷன் அடிக்க முற்பட்டும் பேட்டில் பந்து படாமல் விக்கெட் கீப்பரிடம் தஞ்சம் அடைந்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் சமீபத்தில் வீசிய அதிவேக பந்து வீச்சு இதுவாகும்.
உலக கோப்பை நடைபெற உள்ள ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் வேகப்பந்து வீச்சுதான் எடுபடும் என்பதால் இவ்விருவரின் வேகத்தை பார்த்து பிசிசிஐ அதிகாரிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்,. ஆனால் ஆரோண் தனது நான்காவது ஓவரின் முதல் பந்தை வீசியபோது வலது காலில் தசை பிடிப்பு ஏற்பட்டதாக கூறி மைதானத்தை விட்டு வெளியேறிவிட்டார். மீதமிருந்த ஐந்து பந்தையும் கேப்டன் கோஹ்லிதான் வீசினார்.
ஏற்கனவே முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷமி காயம் காரணமாக ஆட்டத்தில் பங்கேற்காத சூழ்நிலையில், அதிவேக பந்து வீச்சாளர் ஆரோணும் காயமடைந்துள்ளது தேர்வாளர்களை வியர்க்க வைத்துள்ளது. அடுத்த போட்டியில் ஆரோண் பங்கெடுக்க முடியுமா என்பது இன்னும் தெரியவில்லை.
அதே நேரம் இஷாந்த் ஷர்மா பார்மில் இருப்பது இந்திய தேர்வுக்குழுவினருக்கு ஆறுதல் செய்தியாகும்.