டெல்லி: 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பாங்க் நகரங்களில் ஆகஸ்ட் 18ம் தேதி துவங்க உள்ளது. இதுவரை நடந்துள்ள 17 ஏஷியாட் போட்டிகளில் இந்தியாவுக்கு எவ்வளவு பதக்கம் கிடைத்துள்ளது தெரியுமா.
ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு, அதிக விளையாட்டுப் பிரிவுகள் கொண்ட மிக பிரம்மாண்டமான போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளாகும். ஏஷியாட் என்று அழைக்கப்படும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆசிய ஒலிம்பிக் சங்கத்தில் உள்ள 45 நாடுகள் பங்கேற்கின்றன.
இதுவரை 17 ஏஷியாட் முடிந்துள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அடுத்த ஏஷியாட் போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பங்க் நகரங்களில் வரும் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை நடக்க உள்ளது.
40 பிரிவுகளில் நடத்தப்படும் போட்டிகளில் 45 நாடுகள் பங்கேற்க உள்ளன. இந்தியா இதுவரை அனைத்து ஏஷியாட் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது. முதல் ஏஷியாட் 1951ல் டெல்லியில் நடந்தது. இதுவரை நடந்துள்ள 17 ஏஷியாட் போட்டிகளில் இந்தியா 139 தங்கம், 178 வெள்ளி, 299 வெண்கலம் என, 616 பதக்கங்களை வென்றுள்ளது.
அதிக பதக்கங்களை வென்ற நாடுகளில் 6வது இடத்தில் இந்தியா உள்ளது. சீனா 1,342 தங்கம் உள்பட 2,895 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஜப்பான் 2,850 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள தென் கொரிய 2,063 பதக்கங்களை பெற்றுள்ளது. ஈரான் 159 தங்கத்துடன் 495 பதக்கம், கஜகஸ்தான் 140 தங்கத்துடன் 481 பத்தகங்களை வென்றுள்ளன.
2014ல் இன்சியானில் நடந்த ஏஷியாட் போட்டியில் இந்தியா 11 தங்கம், 10 வெள்ளி, 36 வெண்கலம் என, 57 பதக்கங்களை வென்றது. இந்த முறை அதிக பதக்கங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.