கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் போட்டியில் மகளிர் டேபிள் டென்னிஸ் அணி ஏற்கனவே தங்கம் வென்ற நிலையில், ஆடவர் அணியும் தங்கம் வென்றுள்ளது. இதன் மூலம், இந்தியாவுக்கு 9வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடக்கிறது. இந்தப் போட்டியில், இந்தியாவுக்கு இதுவரை 8 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என, 17 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
பாட்மின்டன் அணி, குத்துச்சண்டையில் மேரி கோம் என, மேலும் சில பதக்கங்கள் தயாராக உள்ளன. டேபிள் டென்னிஸ் பிரிவில் மகளிர் அணி நேற்று தங்கம் வென்றது.
டேபிள் டென்னிசிலும் அபாரம்
ஆடவர் அணி நைஜீரியாவுடன் இன்று பைனல்ஸில் மோதியது. இதில் 3-0 என்ற கணக்கில் வென்று இந்தியா தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு கிடைக்கும் 9வது தங்கப் பதக்கமாகும்.
தமிழகத்தின் சத்யன் அசத்தல்
ஒற்றையரில் அசந்தா சரத் 4-11, 11-5, 11-4, 11-9 என்ற கணக்கில் வென்றார். மற்றொரு ஒற்றையரில் தமிழக வீரரான சத்யன் ஞானசேகரன் 10-12, 11-3, 11-3, 11-4 என்ற கணக்கில் அபாரமாக வென்றார். பின்னர் நடந்த இரட்டையரில் ஹர்மீத் தேசாய், சத்யன் ஞானசேகரன் 11-8, 11-5, 11-3 என்ற கணக்கில் வென்றனர்.