ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று நடைபெற்ற கலப்பு பிரிவு ரிலே ரேஸில் இந்தியா இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றது. இந்த போட்டியில் ஹீமா தாஸ் தன் ஓட்டத்தை துவங்கும் போது, அடுத்த ஓடுபாதையில் இருந்த பஹ்ரைன் வீரர் அவர் முன் விழுந்து விட்டார். இதனால், சிறிய நேர இடைவெளி ஏற்பட்டது.
பஹ்ரைன் முதல் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை ஹீமா தாஸுக்கு அந்த சிறிய தாமதம் ஏற்படாமல் இருந்து இருந்தால், இந்தியா தங்கம் வென்று இருக்கும் என கருதப்படுகிறது. இதனால், இந்தியா போட்டி நடுவர்களிடம் புகார் அளித்தனர்.
இன்று காலை புகாரை விசாரித்த நடுவர்கள், அதை நிராகரித்துவிட்டனர். இதனால், இந்தியா மீண்டும் புகார் அளித்து மறுவிசாரணை நடத்த கேட்டுள்ளது.
ரிலே ரேஸ் போட்டிகளை பொறுத்தவரை, நான்கு வீரர்கள் 400 மீட்டர் இடைவெளியில் நின்று இருப்பார்கள். முதலில் ஓடும் வீரர் கையில் பேட்டான் என்கிற ஒரு பொருளை வைத்துக் கொண்டு ஓட வேண்டும். முதல் வீரர் 400 மீட்டர் ஓடி முடித்த பின், அந்த பேட்டானை இரண்டாவது வீரரிடம் கொடுக்க வேண்டும். அதை வாங்கிய பின்னரே, இரண்டாம் வீரர் தன் 400 மீட்டர் ஓட்டத்தை துவங்க வேண்டும். இந்த முறையில், நான்காவது வீரர் தன் 400 மீட்டரை ஓடி முடிப்பதோடு நிறைவு அடையும்.
நேற்று இந்தியாவின் முகம்மது ஏனாஸ் முதலில் ஓடினார். அதிக தூரம் முன்னிலையில் தன் ஓட்டத்தை முடித்தார். அடுத்து, இரண்டாவதாக பூவம்மா ஓடி முடித்த போது இந்தியா சிறிது பின்தங்கியது. பஹ்ரைன் முன்னிலையில் இருந்தது.
இரண்டாவதாக ஓடி முடித்த பஹ்ரைன் வீரர், இந்தியா சார்பாக மூன்றாவதாக ஓட இருந்த ஹீமா தாஸ் முன் விழுந்து விட்டார். இதன் காரணமாக ஹீமா அவரை தாண்டி குதித்து அடுத்த ஓடுபாதையில் ஓடி தன் ஓட்டத்தை நிறைவு செய்தார். பஹ்ரைன் வீரர் வேண்டுமென்றே இப்படி செய்தாரா என இப்போது சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தியா மறுவிசாரணை கோரி உள்ள நிலையில், என்ன முடிவு வருகிறது என பொறுத்து இருந்து பார்ப்போம்.