டெல்லி : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய டென்னிஸ் சார்பில் ஐந்து பதக்கங்கள் வெல்ல வேண்டும் என திட்டமிடப்பட்டது. எனினும், மூன்று பதக்கங்கள் மட்டுமே கிடைத்தது. இதற்கான காரணங்களை ஆசிய விளையாட்டின் இந்திய டென்னிஸ் அணி பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஸீஷன் அலி தெரிவித்துள்ளார்.
இந்தியா இந்த ஆசிய விளையாட்டில் டென்னிஸில் மூன்று பதக்கங்கள் வென்றது. ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா, திவிஜ் சரண் இணை தங்கம் வென்றது. அங்கிதா ரெய்னா மகளிர் ஒற்றையரிலும், பிரஜ்னேஷ் ஆடவர் ஒற்றையரிலும் வெண்கலம் வென்றனர். இந்த தொடர் தொடங்கும் முன்பு, லியாண்டர் பயஸ் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி ஸீஷன் அலி கூறுகையில், "எங்கள் இலக்கு ஐந்து டென்னிஸ் விளையாட்டிலும் பதக்கங்கள் வெல்வது தான். அதில் ராம் (ராம்குமார் ராமனாதன்) ஒற்றையர் பிரிவில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தார். கடந்த ஆறு மாதங்களாக அவர் நல்ல முறையில் டென்னிஸ் ஆடி வருகிறார். அவர் தவறான நுணுக்கங்கள் கொண்டு ஆடியது பெரிய ஏமாற்றம். அவருக்கு அசௌகரியமான விஷயங்களை செய்தார். அங்கே பதக்கம் வெல்ல வேண்டும் என்ற ஒரு விஷயம் இருந்தது" என்றார்.
லியாண்டர் பயஸ் ஆடவர் இரட்டையர் போட்டியில் தனக்கு சரியான இணை இல்லாததால், இந்த தொடரில் ஆட மறுத்துவிட்டார். அதனால், கடைசி நாட்களில் சில மாற்றங்களோடு இந்தியா இரண்டு கலப்பு இரட்டையர் மற்றும் ஒரு ஆடவர் இரட்டையர் என களமிறங்கியது. லியாண்டர் பயஸ் இருந்திருந்தால் விளைவுகள் வேறு மாதிரியாக இந்தியாவுக்கு சாதகமாக இருந்திருக்கும் என கூறினார் ஸீஷன் அலி.