சிட்னி : 21வது காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை வென்று வருகிறது. இன்று ஆடவருக்கான 105 கிலோ பளுதூக்குதல் பிரிவில் பிரதீப்சிங் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்தியாவின் வீரர், வீராங்கணைகள் தொடர்ந்து பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். மீராபாய் சானு, சதீஷ்குமார் சிவலிங்கம், ரவிகுமார், விகாஸ் தாகூர் என்று வீரர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.
மகளிருக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பகேர் தங்கப் பதக்கமும், ஹீனா சித்து வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர். பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். இந்நிலையில் இன்றைய போட்டிகளில் இந்தியாவிற்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.
ஆடவருக்கான 105 கிலோ பளுதூக்குதல் பிரிவில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பிரதீப்சிங் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இந்தியா இது வரை 7 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.