புது பிரச்னை
இந்த ஒலிம்பிக் இந்தியாவுக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது என இந்திய ஒலிம்பிக் அமைப்பும், விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில் புதிய சர்ச்சை தற்போது கிளம்பியுள்ளது. ஒலிம்பிக் போட்டியின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஏமாற்றம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டவர் வினேஷ் போகட். ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் மகளிர் 53 கிலோ எடைப்பிரிவில் கலந்துக்கொண்ட இவர் காலிறுதியில் தோல்வி அடைந்தார். பெலாரசில் வனேசாவிடம் 3-9 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார் வினேஷ் போகட்.
புதிய சர்ச்சை
போட்டியின் போது அவர், ஒவ்வொரு இந்திய வீரர், வீராங்கனைகளும் இந்திய அணியின் ஸ்பான்சரின் லோகோ பதியப்பட்டிருந்த ஜெர்ஸியை அணிய வேண்டும். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த வினேஷ் போகட் தனது தனிப்பட்ட ஸ்பான்சரான 'நைக்' நிறுவனத்தின் லோகோ பதியப்பட்ட ஜெர்ஸியை அணிந்து சென்றார். இது அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தற்காலிக சஸ்பெண்ட்
இந்நிலையில் அவரின் மீது விதிமுறை மீறல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், இந்திய மல்யுத்த ஃபெடேரஷன் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் வினேஷ் போகட் விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை அவர் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிசியோ தெரபிஸ்ட்
டோக்கியோ ஒலிம்பிக்கில் வினேஷ் போகட் மீது எழும் 3வது சர்ச்சை இது. ஒலிம்பிக் தொடங்குவதற்கு முன்னதாக அவர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஒரே ஒரு ஃபிசியோதெரபிஸ்டை ஏற்பாடு செய்ய கோரியிருந்தார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த அவர், மற்ற விளையாட்டு வீராங்கனைகள் ஒவ்வொருவரும் 3 - 4 பயிற்சியாளர்களை வைத்துள்ளனர். ஆனால் நாங்கள்
4 வீராங்கனைகளுக்கு சேர்த்து ஒரே ஒரு பிசியோதெரஃபிஸ்ட் கேட்டது குற்றமா? என பகிரங்கமாக ட்வீட் போட்டிருந்தார்.
கொரோனா அச்சுறுத்தல்
இதுமட்டுமல்லாமல் ஒலிம்பிக் கிராமத்திலும் அவர் தங்க மறுப்பு தெரிவித்துவிட்டார். வினேஷ் போகட் ஹங்கேரியில் பயிற்சியை முடித்துவிட்டு நேரடியாக டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு சென்றுவிட்டார். ஆனால் மற்ற மல்யுத்த வீராங்கனைகளான சோனம் மாலிக் அனுஷு மாலிக், சீமா பிஸ்லா ஆகியோர் இந்தியாவில் இருந்து டோக்கியோ சென்றனர். எனவே அவர்களுக்கு பக்கத்து அறையில் கூட வினேஷ் போகட் தங்கமாட்டேன் என்றும், கொரோனா பரவிவிடும் என்றும் அதிருப்தி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.