செஸ் ஒலிம்பியாட்
நடப்பாண்டிற்கான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதலில் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்கு போர் நடைபெற்று வருவதால் தற்போது இந்தியாவில் நடைபெறுகிறது. அதுவும் மகாபலிபுரத்தில் இந்த செஸ் போட்டிகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது ஆச்சரியம் கொடுத்தது.
வல்லுநரின் சுவாரஸ்ய தகவல்கள்
இந்நிலையில் இதற்கான ஏற்பாடுகள் குறித்து செஸ் பயிற்சியாளர் ஆர்.பி. ரமேஷ், பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதில், செஸ் ஒலிம்பியாட் என்பதை சாதாரணமாக நடத்திவிட முடியாது. இந்த போட்டியில் கலந்துக்கொள்ள மொத்தம் 200 நாடுகளைச் சேர்ந்த 2,000 வீரர்கள் வரை பங்கேற்பார்கள். ஒவ்வொரு நாட்டில் இருந்தும் 5 வீரர், 5 வீராங்கனைகள் என மொத்தம் 10 பேர் கொண்ட குழுவாக வருகை தருவார்கள். இதில் இந்தியா தொகுத்து நடத்தும் நாடு என்பதால் 2 குழுக்கள் பங்கு பெறும்.
சவால் நிறைந்த பணி
மொத்தமுள்ள 2,000 பேருக்கும் சிறந்த ஹோட்டல்களில் தங்கும் ஏற்பாடு, போக்குவரத்து வசதி, சிறந்த உணவு என அனைத்து சவால்களையும் தமிழக அரசு ஏற்று நடத்தவுள்ளது. வீரர்கள் விளையாடும் ஒவ்வொரு செஸ் போர்டும் ரூ. 10 ஆயிரம் வரை இருக்கும். எனவே இதற்காக ரூ. 100 கோடி வரை செலவளிக்கவுள்ளதாக தமிழக அரசு பட்ஜெட் ஒதுக்கியுள்ளது.
ஒலிம்பிக்கில் செஸ் போட்டி
தொடர்ந்து பேசிய அவர், மிகவும் பிரபலமான "ஒலிம்பிக்" தொடரில் செஸ் போட்டி இன்று வரை சேர்க்கப்படவில்லை. அதற்கான பேச்சுவார்த்தைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதற்கான பணிகளாக தான் செஸ் ஒலிம்பியாட் என்ற தனித்தொடர் நடத்தப்பட்டு வருகிறது என ரமேஷ் தெரிவித்தார். இந்த சமயத்தில் இந்த தொடரை தமிழக அரசு பிரமாண்டமாக நடத்தி முடித்தால், மிகப்பெரிய கவுரவம் தமிழகத்திற்கு வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.