இந்தியாவுக்கு ஐந்தாவது இடம்
215 பேர் கொண்ட குழுவினருடன் இந்த போட்டிக்கு அனுப்பப்பட்ட இந்திய அணி பதக்கப்பட்டியலில் 15 தங்கம் உள்பட 65 பதக்கங்களுடன் 5வது இடத்தை பிடித்துள்ளது. அதிகபட்சமாக மல்யுத்தத்தில் 5 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கலம் என்று 13 பதக்கங்களும், துப்பாக்கி சுடுதலில் 4 தங்கம், 9 வெள்ளி, 4 வெண்கலம் என்று 17 பதக்கங்களும், பளுதூக்குதலில் 3 தங்கம் உள்பட 14 பதக்கங்களும் கிடைத்தன.
சொந்த மண்ணில் புலி
டெல்லியில் 2010ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களை குவித்து முதல் முறையாக 2வது இடத்தை பெற்றது. அப்போது போட்டியை நடத்திய நாடு என்ற வகையில் நமக்கு சாதகமான வில்வித்தை, டென்னிஸ் போன்ற போட்டிகளை சேர்த்திருந்தோம். ஆனால் இந்த முறை அவ்விரு விளையாட்டுகளும் கழற்றி விடப்பட்டன. இது தவிர மல்யுத்தத்தில் கிரகோ-ரோமன் பிரிவு, துப்பாக்கி சுடுதலில் பல பிரிவுகள் நீக்கப்பட்டன. இந்தியாவின் பதக்க எண்ணிக்கை வெகுவாக குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
தங்க மங்கை
நடப்பாண்டு காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு வாங்கித் தந்தார். 1934ம் ஆண்டில் இருந்து காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று வரும் இந்தியா இதுவரை ஒட்டுமொத்தமாக 141 தங்கப்பதக்கம் உள்பட 373 பதக்கங்களை கைப்பற்றி இருக்கிறது.
28 வருடங்களுக்கு பிறகு
இங்கிலாந்து 58 தங்கம் உள்பட 170 பதக்கங்களை ஈட்டி 28 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. காமன்வெல்த் போட்டியில் அந்த அணி முதலிடம் பிடிப்பது இது 7வது முறையாகும். அது மட்டுமின்றி 84 ஆண்டு கால காமன்வெல்த் போட்டி வரலாற்றில் ஒரு காமன்வெல்த் தொடரில் இங்கிலாந்து வென்ற அதிகபட்ச பதக்க எண்ணிக்கையும் இவை தான்.
முதன்முறையாக முதலிடம் இல்லை
46 தங்கம் உள்பட 132 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 2வது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா பதக்கப்பட்டியலில் முதல் இடத்தை இழப்பது 1986ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.
ஜிம்னாஸ்டிக் கன்னி
இந்த காமன்வெல்த் தொடரில் அதிக பதக்கங்களை வாங்கி குவித்தவர் கனடா நாட்டு ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை பாட்ரிசியா பெஸ்சோவ் பென்கோ. 17 வயதே நிரம்பிய இவர், தான் பங்கேற்ற முதன் காமன்வெல்த் போட்டியிலேயே 5 தங்கம், ஒரு வெண்கலம் என்று 6 பதக்கங்களை சேகரித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து விட்டார். ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியா 4 தங்கமும், 2 வெண்கலமும் ஈட்டினார்.
உசேன் போல்ட் அறிமுகம்
உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படுபவர் ஜமைக்கா நாட்டின் ஓட்டப்பந்தய புயல் உசேன் போல்ட். 27 வயதான இவர் ஒலிம்பிக்கில் 6 தங்கமும், உலக தடகளத்தில் 8 தங்கமும் வென்ற சரித்திர நாயகன். ஆனாலும் ஏதாவது ஒரு காரணத்தால் காமன்வெல்த் போட்டிகளில் களம் இறங்கமுடியாமல் இருந்தது. உசேன் போல்ட் முதல் முறையாக இந்த காமன்வெல்த் தொடரில் அறிமுகம் ஆனார்.
ஊதி தள்ளிய உசேன் போல்ட்
காயத்தால் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் பந்தய களத்தில் குதிப்பதை தவிர்த்த உசேன் போல்ட் நேற்று முன்தினம் இரவு நடந்த 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அடியெடுத்து வைத்தார். ஜாசன் லிவர்மோர், கெமார் பெய்லி கோலே, நிக்கெல் ஆஷ்மீட், உசேன் போல்ட் ஆகிய கொண்ட ஜமைக்கா அணியினர் 37.58 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்கள். இதில் 4வது வீரராக மின்னல் வேகத்தில் ஓடி இலக்கை அடைந்த உசேன் போல்ட், ரசிகர்களை பிரமிப்பில் அசர வைத்தார்.
ஜோடி நம்பர்-1
காமன்வெல்த் விளையாட்டில் ஸ்குவாஷ் பெண்கள் இரட்டையர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த தீபிகா பலிக்கலும், ஜோஷ்னா சின்னப்பாவும் இணைந்து தங்கப்பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்தனர். காமன்வெல்த் ஸ்குவாஷில் இந்தியா பதக்கம் ஜெயித்தது இது தான் முதல் முறையாகும். தீபிகா பலிக்கலின் ஆட்டத்தை நேரில் கண்டுகளித்த அவரது வருங்கால கணவரான இந்திய கிரிக்கெட் வீரsர் தினேஷ் கார்த்திக் ஆரம்பத்தில் இருந்தே உற்சாகப்படுத்தினார்.
செக்ஸ் புகார்
கிளாஸ்கோவுக்கு இந்திய அணியுடன் சென்றிருந்த இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தாவும், அணியில் இணைக்கப்படாத அதிகாரியாக மல்யுத்த நடுவரான வீரேந்தர் மாலிக்கும் சென்றிருந்தனர். இதில் காமன்வெல்த் போட்டிகளின் கடைசி நாளான நேற்று இருவரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். ராஜீவ் மேத்தா மீது மதுகுடித்து வாகனம் ஓட்டியதாகவும், வீரேந்தர் மாலிக் மீது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் புகார் பதிவு செய்யப்பட்டது.