டெல்லி: இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியா விசா தர மறுத்துள்ளது.
அதனால், அந்த வீரர்கள் இந்தியா வர முடியவில்லை. இதையடுத்து, இந்த விவகாரத்தில் சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு தலையிட்டுள்ளது.
ஆடவர் 25 மீட்டர் விரைவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க இரண்டு பாகிஸ்தான் வீரர்கள், கலீல் அஹ்மது மற்றும் ஜி எம் பாஷிர், இந்திய அரசிடம் விசா கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். அதற்கிடையே காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவம் நடைபெற்றதால், விசா அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
உலகக்கோப்பை போட்டிகள் துவங்கும் வரை இந்தியா விசா தராத நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் அதில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. மற்ற நாட்டு வீரர்களுக்கு தங்கள் நாட்டில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விசா தர மறுப்பது சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு விதிகளுக்கு எதிரானது.
இதையடுத்து, இந்தியாவிடம் இருந்து எழுத்துப்பூர்வமான ஒப்புதல் வரும் வரை இந்தியாவுடன் இனி எந்த உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்தும் பேசப் போவதில்லை என சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு கூறியுள்ளது.
இந்த விவகாரத்தால் இந்தியா இனி ஒலிம்பிக் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.