ஐபிஎல் நிர்வாகிகள் குழு கூட்டம்
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் 2020 தொடர் யூஏஇயில் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் தேதிகள் உள்ளிட்ட அம்சங்களை விவாதிக்கும்வகையில் நேற்று ஐபிஎல் நிர்வாகிகள் குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகளை நடத்த அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தேதிகள் இறுதி செய்யப்பட்டது
ஐபிஎல் போட்டிகள் முதலில் செப்டம்பர் 26ம் தேதி முதல் துவங்கும் என்று கூறப்பட்ட நிலையில், அந்த தேதிகள் நீட்டிக்கப்பட்டு தற்போது செப்டம்பர் 19ம் தேதி முதல் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல நவம்பர் 8ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் ஒளிபரப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளியையொட்டி தற்போது 10ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. நிர்வாகிகள் குழு கூட்டத்தில் இந்த தேதிகள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளன.
நிர்வாகிகள் குழு கூட்டத்தில் முடிவு
எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறலையடுத்து நாட்டில் பல்வேறு சீன பொருட்களுக்கு, ஆப்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஐபிஎல்லில் முக்கிய ஸ்பான்சராக உள்ள விவோ ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதே ஸ்பான்சரை தொடர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடைபெற குறுகிய காலமே உள்ள நிலையில், அடுத்த ஸ்பான்சரை பெறுவது தற்போது சாத்தியமில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மகளிர் ஐபிஎல்லுக்கு அனுமதி
தேதி மாற்றத்தையடுத்து தற்போது 53 நாட்கள் இந்த போட்டிகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மதிய நேரத்தில் 10 போட்டிகள் நடத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாயில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதனிடையே இந்த ஐபிஎல் நிர்வாகிகள் குழு கூட்டத்தில் மகளிர் ஐபிஎல் போட்டிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகளில் சேலஞ்சர் தொடரில் மகளிர் கிரிக்கெட் அணி விளையாடும் என்றும் கூறப்பட்டுள்ளது.