மார்கோ: மிகவும் வலுவான ஜெர்மனிக்கு அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்று அதிர்ச்சி கொடுத்த ஈரான், அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இந்தியாவில் நடந்து வருகின்றன. சி பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வென்று, அடுத்தச் சுற்றுக்கு ஈரான் முன்னேறியது.
துவக்கத்தில் இருந்தே ஜெர்மனி அணி நடுகள ஆட்டமும், தடுப்பாட்டமும் மோசமாக இருந்தது. அதை சாதகமாக்கி ஈரான் கோல்களை அடித்து சுலபமாக வென்றது.
குய்னா அணியை ஏற்கெனவே வென்ற ஈரான், சி பிரிவில் 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அதன் மூலம், 16 அணிகள் மோத உள்ள நாக்-அவுட் பிரிவுக்கு முன்னேறியது.
கோஸ்டாரிகாவை வென்ற ஜெர்மனி, அடுத்த ஆட்டத்தில் குய்னாவை வென்றால்தான், அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் குய்னா - கோஸ்டாரிகா அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தன. அதனால் தலா ஒரு புள்ளிகளுடன் உள்ளன. ஈரான் தனது அடுத்த லீக் போட்டியில் கோஸ்டாரிகாவை சந்திக்கிறது.
நேற்று இரவு நடந்த டி பிரிவு ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 4-0 என நைஜர் அணியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் பிரேசில் அணி 2-0 என வடகொரியாவை வென்றது.
இன்று இ பிரிவில் நடக்கும் ஆட்டங்களில் பிரான்ஸ் - ஜப்பான் மற்றும் ஹோண்டுராஸ் - நியூ காலடோனியா மோதுகின்றன. எப் பிரிவில் இங்கிலாந்து - மெக்சிகோ அணிகளும், ஈராக் - சிலி அணிகளும் மோதுகின்றன.