வதோரா: கிரிக்கெட் வீரர்களான இர்பான் மற்றும் யூசுப் பதான் சகோதரர்கள் மீது ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.வதோராவில் இர்பான் பதான், யூசுப் பதான் ஆகியோருக்கு சொந்தமாக ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்று உள்ளது. இதில் உள்ள ஒரு கடையை கல்பனா ரோச்சனி என்பவர் 2006-ம் ஆண்டு முதல் லீசுக்கு எடுத்து அழகு நிலையம் நடத்தி வந்தார். அவர் பாதி லீஸ் தொகையை கொடுக்காமலேயே அந்த கடையில் இருந்து வந்திருக்கின்றார். அதனால் பதான் சகோதரர்கள் அவரை கட்டாயமாக வெளியேற்றி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கல்பனா கூறுகையில், 6 ஆண்டுகளுக்கு லீசுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் என்னை முன் கூட்டியே கடையை விட்டு செல்லுமாறு கூறினார்கள். ஆனால் நான் மறுக்கவே என்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள். என் அழகு நிலையத்தில் இருந்த ரூ.12 லட்சம் என்ன ஆனது என்று தெரியவில்லை என்றார். ஆனால் பதான் குடும்பத்தினர் கல்பனாவின் குற்றச்சாட்டை மறுத்தனர். லீஸ் தொகை முழுவதையும் கொடுக்காததால் தான் கடையை விட்டு அவரை வெளியேற்றினோம். மேலும் அதை சட்டப்படிதான் செய்தோம் என்று தெரிவித்தனர்.தற்போது கல்பனா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் பதான் சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய குஜராத் டி.ஜி.பி.உத்தரவிட்டுள்ளார்.