ஜெருசலம்: இஸ்ரேலில் நடந்த கிரிக்கெட் போட்டியில் அம்பயராக இருந்த ஹிலல் ஆஸ்கர் தலையில் பந்து பட்டு மரணம் அடைந்துள்ளார்.
இஸ்ரேல் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹிலல் ஆஸ்கர்(55). இஸ்ரேலில் உள்ள துறைமுக நகரமான அஷ்தோதில் தேசிய லீக் சீசனின் இறுதிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் ஹிலல் அம்பயராக இருந்தார். அப்போது பேட்ஸ்மேன் ஒருவர் அடித்த பந்து வேகமாக வந்து ஹிலலின் தலையில் பட்டது. இதில் கீழே விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவரின் மறைவுக்கு இஸ்ரேலிய கிரிக்கெட் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. ஹிலல் சர்வதேச போட்டிகளிலும் அம்பயராக இருந்தவர்.
ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் விளையாடிய அந்நாட்டு வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்துபட்டதில் அவர் மரணம் அடைந்தார். அவர் இறந்த 2 நாட்களில் ஹிலலும் தலையில் பந்து பட்டு இறந்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஹிலலின் மரணம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் இது ஏதேச்சையாக நடந்தது தான் என்றும், திட்டமிட்ட காரியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.