தொடர்
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெறாமல் இருந்தது. இதனையடுத்து கடந்த 18ம் தேதி உலக துப்பாக்கி சுடும் போட்டி டெல்லி தொடங்கியது. இந்த போட்டி வரும் 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் வீரர், வீராங்கனைகள் எடுக்கும் புள்ளிகள் அடிப்படையில் உலக தரவரிசையில் முன்னேற்றம் காண்பதுடன், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற முடியும் என்பதால் இந்த போட்டி அனைத்து வீரர்களுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
புறக்கணித்த நாடுகள்
இந்த போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஈரான், உக்ரைன், சிங்கப்பூர், பிரான்ஸ், இத்தாலி, உள்பட 53 நாடுகளை சேர்ந்த 294 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். போட்டியை நடத்தும் இந்தியா சார்பில் 57 பேர் கொண்ட அணி களமிறங்கியுள்ளது.இதில் ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 15 வீரர்-வீராங்கனைகளும் அடங்குவார்கள். கொரோனா அச்சுறுத்தலால் சீனா, ஜப்பான் நாட்டு வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை.
பாசீட்டீவ்
இந்நிலையில் போட்டியில் பங்கேற்று இருந்த ஒரு அயல்நாட்டு வீரர் உட்பட 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம் தெரிவித்துள்ளது. வீரர்களுக்கு தினந்தோறும் நடத்தப்பட்டு வந்த கொரோனா பரிசோதனை மூலம் இது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்., தனி ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 18ம் தேதி அயல்நாட்டு வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சக வீரர்கள்
கொரோனா உறுதியான வீரர்களுடன் ஹோட்டல் அறையில் தங்கி இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அவர்களும் ரிசல்ட் வரும் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களின் பரிசோதனை முடிவுகளை பொறுத்து போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்களா என்பது தெரியவரும்.