கொரோனா தாக்கம்
கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் கூட 600 பேருக்கும் மேல் கொரோனா வைரஸ் பாதிப்பில் உள்ளனர்.
விளையாட்டுத் தொடர்கள் நிலை
இந்த நிலையில், உலகின் பல விளையாட்டுத் தொடர்கள் தள்ளி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் நிறுத்தப்பட்டன. ஜூலையில் நடக்க இருந்த ஒலிம்பிக் தொடருக்கான ஏற்பாடுகள் மட்டும் தொடர்ந்து நடந்து வந்தது.
ஜப்பான் பிடிவாதம்
ஜப்பான் ஒலிம்பிக் நிர்வாகிகள் எந்த தடையும் இன்றி ஒலிம்பிக் தொடரை நடத்துவோம் என தொடர்ந்து கூறி வந்தது. ஆனால், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டிய நிலையில், உலகம் மோசமான நிலைக்கு சென்று கொண்டு இருப்பதை உணர்ந்தது ஜப்பான்.
ஒலிம்பிக் தள்ளி வைப்பு
இந்த நிலையில், ஜப்பான் பிரதமர் கடந்த செவ்வாய் அன்று 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரை ஓராண்டிற்கு தள்ளி வைப்பதாக அறிவித்தார். 2021 வெயில் காலத்திற்குள் இந்த தொடரை நடத்த உள்ளதாக ஜப்பான் கூறி உள்ளது.
பெயர் அதே தான்
2021ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடர் நடந்தாலும் அந்த தொடரின் பெயரை 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடர் என்றே வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது ஜப்பான். அதே போல, ஒலிம்பிக் ஜோதி அதுவரை ஜப்பானிலேயே இருக்கும் எனவும் கூறி உள்ளது அந்த நாட்டு அரசு. பெயரை மாற்றாவிட்டாலும் தொடரை தள்ளி வைத்த வரை மகிழ்ச்சி என விளையாட்டு வீரர்கள் இந்த முடிவை வரவேற்று வருகிறார்கள்.