டோக்கியோ : ஜப்பான் துணை பிரதமர் 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு கொரோனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை ஒரு விசித்திர வரலாறு மூலம் விளக்கம் கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.
ஒவ்வொரு 40 ஆண்டுக்கும் ஒலிம்பிக் தொடர் பாதிக்கப்படும் என்று அவர் ஆதாரப்பூர்வமாக கூறி, இப்போது கொரோனா பாதிப்பு வந்திருப்பது ஒன்றும் ஆச்சரியம் அல்ல என்றார். அவர் சொல்லும் தகவல் நமக்கும் ஆச்சரியமாகவே உள்ளது.
கடந்த 1940ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் காரணமாக சப்பாரோ குளிர்கால ஒலிம்பிக் தொடர் ரத்து செய்யப்பட்டது. இது அனைவரும் அறிந்த ஒன்றே.
ஆனால், அடுத்த 40 ஆண்டுகளுக்குப் பின் நடந்த 1980 மாஸ்கோ ஒலிம்பிக் தொடரில் வேறு ஒரு சிக்கல் ஏற்பட்டது. அப்போது அமேரிக்கா - ரஷ்யா இடையே பனிப்போர் நிகழ்ந்து வந்தது.
ரஷ்யா ஆப்கானிஸ்தான் நாட்டை ஆக்கிரமித்ததை கண்டித்து, அமெரிக்கா தலைமையில் பல மேற்கத்திய நாடுகள் அந்த ஒலிம்பிக் தொடரை புறக்கணித்தன. அது அரைகுறை ஒலிம்பிக் தொடராக நடந்து முடிந்தது.
அதையடுத்து தற்போது 40 ஆண்டுகள் கழித்து 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடர் கொரோனா வைரஸ் பரவி வருவதால் நடைபெறுமா? என்ற குழப்பத்தில் உள்ளது.
இது குறித்து ஜப்பான் துணை பிரதமர் டாரோ ஆசோ கூறுகையில், "சப்பாரோ ஒலிம்பிக் தொடர் 1940இல் நடந்திருக்க வேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை. அடுத்து மாஸ்கோ ஒலிம்பிக் தொடர் 1980இல் மேற்கத்திய நாடுகள் புறக்கணிபால் பாதி சிதைந்து போனது. அடுத்த 40 ஆண்டுகள், இந்த வருடம் தான். பெரிய ஊடகங்கள் நான் "இது சாபம் வாங்கிய ஒலிம்பிக்" என கூறினால் விரும்புவார்கள். ஆனால், அது தான் நிதர்சனம்" என்றார்.
இந்த முறை ஒலிம்பிக் தொடர் கொரோனா வைரஸால் சாபம் வாங்கி உள்ளது.