இம்ரான் கான்
இம்ரான் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உலகக்கோப்பை வெல்ல வைத்த கேப்டன். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மறுக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தி இருந்த இம்ரான் கான் முன்மாதிரி கேப்டனாக இருந்தார். ஓய்வுக்குப் பின் சில ஆண்டுகள் கழித்து அரசியலில் குதித்தார்.
அரசியல் மாற்றம்
துவக்கத்தில் மக்கள் ஆதரவு அவருக்கு குறைவாக இருந்தது. காலப்போக்கில் பாகிஸ்தான் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களால் அவரது கட்சிக்கு ஆதரவு பெருகியது. அதைத் தொடர்ந்து தேர்தலில் வென்று அவர் பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் பதவியில் அமர்ந்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு
அவர் பிரதமர் ஆன சமயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மோசமான நிலையில் இருந்தது. அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைமைப் பொறுப்பில் மாற்றங்களை செய்தார். ஆனாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மோசமான நிலை தொடர்கிறது.
ஜாவேத் மியான்தத் விமர்சனம்
இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜாவேத் மியான்தத் இம்ரான் கான் மீது கடும் குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளார். இம்ரான் கான், ஜாவேத் மியான்தத் கேப்டன்சியில் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதையும் குறிப்பிட்டு இம்ரான் கானை வறுத்து எடுத்துள்ளார் மியான்தத்.
மோசமான நிலை
"பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் அதிகாரிகள் யாருக்கும் இந்த விளையாட்டின் அடிப்படை கூட தெரியாது. அங்கே நிலவும் மோசமான நிலை குறித்து இம்ரான் கானிடம் நான் தனிப்பட்ட முறையில் பேச உள்ளேன். நம் நாட்டிற்கு சரியில்லாத யாரையும் நான் விடமாட்டேன்" என்றார் மியான்தத்.
வாசிம் கான்
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைமை அதிகாரி வாசிம் கான் இங்கிலாந்து நாட்டில் பிறந்து அங்கேயே உள்ளூர் கிரிக்கெட் ஆடியவர். அவரது நியமனம் குறித்து பேசிய மியான்தத், அவர் ஊழல் செய்து விட்டு நாட்டை விட்டு ஓடிவிட்டால் என்ன நடக்கும்? என கேள்வி எழுப்பி உள்ளார்.
நான் தான் உனக்கு கேப்டன்
"நான் தான் உனக்கு கேப்டன். நீ எனக்கு கேப்டன் இல்லை. நான் அரசியலுக்கு வருவேன். வந்து உன்னிடம் பேசுவேன். எப்போதுமே நான் தான் உன்னை வழி நடத்தினேன். ஆனால், இப்போது கடவுள் போல நடந்து கொள்கிறாய்." என விளாசினார்.
நாட்டின் ஒரே புத்திசாலி
மேலும், "இந்த நாட்டில் வேறு யாருமே ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ் அல்லது எந்த பாகிஸ்தான் பல்கலைக்கழகத்துக்கும் போகாத மாதிரியும், நாட்டின் ஒரே புத்திசாலி போலவும் நடந்து கொள்கிறாய். மக்களை குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என்றார் மியான்தத்.
இதை மறுக்க முடியுமா?
"நாட்டை பற்றி கவலைப்படுவதே இல்லை. நீ என் வீட்டுக்கு வந்தாய். பிரதமர் ஆக பதவி பெற்று சென்றாய். இதை மறுக்க முடியுமா? நான் சவால் விடுகிறேன். நான் இதை இம்ரான் கானிடம் கூறி இருக்கிறேன். நான் தான் அவரை பிரதமர் ஆக்கினேன்" என கடுமையாக பேசினார் மியான்தத்.
சர்ச்சை
ஜாவேத் மியான்தத் பரபரப்பை கிளப்ப இப்படி பேசி இருக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இம்ரான் கான் மீது அவருடன் ஆடிய வீரர்கள் யாரும் இதுவரை நேரடியாக எந்த விமர்சனத்தையும் வைக்காத நிலையில், மியான்தத் பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது.