கமல்ப்ரீத் கவுர்
இன்று, பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டிகள் நடைபெற்றன. குரூப் 'ஏ' மற்றும் குரூப் 'பி' என்று இரண்டு பிரிவுகளாக வீராங்கனைகள் பிரிக்கப்பட்டு களமிறங்கினர். இரண்டு குரூப்பிலும் சேர்த்து மொத்தம் 31 வீராங்கனைகள் இடம் பெற்றிருந்தனர். இதில், குரூப் 'பி' யில், இடம் பெற்றிருந்த கமல்ப்ரீத் கவுர், 64 மீட்டர் தூரம் வீசி, தனது பிரிவின் பட்டியலில் இரண்டாவது வீராங்கனையாக இடம் பிடித்தது, நேரடியாக இறுதிப் போட்டிக்கும் தகுதிப் பெற்றார்.
மெடல் உறுதி?
கமல்பிரீத் கவுர் தன்னுடைய முதல் சுற்றில் 60.29 மீட்டர் தூரம் வீசினார். பின்னர் இரண்டாவது சுற்றில் 63.97 மீட்டர் வீசி மிரள வைத்தார். கடைசி மற்றும் மூன்றாவது வாய்ப்பில் 64.00 மீட்டர் தூரம் வீசி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்று வியக்க வைத்தார். இன்று நடந்த போட்டியில், நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்ற வீராங்கனைகள் இருவர் மட்டுமே. அதில் கமல்ப்ரீத்தம் ஒருவர் என்பது தான் ஹைலைட். அமெரிக்க வீராங்கனை அல்மன் 66.42 தூரம் வீசி முதலிடம் பிடித்தார். இவர் ஒருவர் மட்டும் தான், கமல்பிரீத்-ஐ விட அதிக தூரம் வீசியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல வீசிய 64 மீட்டர் தூரம் என்பது, 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்த குரோஷிய வீராங்கனை எடுத்த புள்ளிகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டி வரும் ஆகஸ்ட் 2ம் தேதி மாலை 4:30 மணிக்கு நடைபெறுகிறது. அன்றைய தினம் இந்தியாவுக்கு நிச்சயம் கமல்ப்ரீத் கவுர் மெடல் வென்றுத் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயம் செய்த தந்தை
இந்த நிலையில், மகள் கமல்ப்ரீத் விளையாடுவதை பார்க்காமல், தனது விவசாய பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார் அவரது தந்தை குல்தீப் சிங். இதுகுறித்து அவர் இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில், "போட்டி தொடங்கும் நேரம் பற்றி நேற்று கமல் என்னிடம் கூறினார். நான் போட்டிக்காக காத்திருந்தேன். ஆனால் டிவியில் வேறு எதையோ காட்டினார்கள். எனது பண்ணையில் எனக்கு சில வேலைகள் இருந்ததால் நான் அதிகம் காத்திருக்கவில்லை.
ஹைலைட்ஸ் பார்த்தேன்
"நான் எனது பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த போதுதான், எனக்கு தொலைபேசியில் அழைப்புகள் வர ஆரம்பித்தன. பிறகு உடனே என் வீட்டிற்கு விரைந்து, பின்னர் நான் மீண்டும் போட்டியை ஒளிபரப்பிய போது அதனை பார்த்தேன்" என்று கூறியிருக்கிறார். பஞ்சாபின் ஸ்ரீ முக்த்சர் சாஹிபில் உள்ள பாதல் கிராமத்தைச் சேர்ந்த கமல்பிரீத், டோக்கியோவில் மிகச்சிறப்பாக செயல்பட்டு தங்கப்பதக்கத்திற்கான நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.
தங்கம் உறுதி?
ஆனால், உண்மையில் கமல்ப்ரீத் சிறந்த செயல்பாடு இதுவல்ல. கவுர் இரண்டு முறை தேசிய சாதனையை முறியடித்துள்ளார். முதலில் ஃபெடரேஷன் கோப்பையில் 65 மீ தூரம் தாண்டி வீசிய முதல் இந்தியப் பெண்மணி எனும் பெருமையைப் பெற்றார். பின்னர் இந்திய கிராண்ட் பிரிக்ஸ் -4 இல் அவர் 66.59 மீட்டர் தூரம் வீசி சாதனைப் படைத்தார். இதுபோன்று ஒலிம்பிக்ஸ் இறுதிப் போட்டியிலும் கமல்ப்ரீத் கவுர் வீசினால், இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் உறுதியாக கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.