டெல்லி : விளையாட்டு அமைச்சகம் இன்று கேல் ரத்னா விருதுகள் மற்றும் இதர விளையாட்டு விருதுகள் வென்றவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் முக்கியமாக ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட விராட் கோலி மற்றும் மீராபாய் சானு இருவரும் 2018ஆம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருது வென்று இருக்கிறார்கள்.
இதில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி பெயர் 2016இல் பரிசீலிக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் இந்த ஆண்டு விருது வென்றுள்ளார்.
இதுவரை இந்தியாவில் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே கேல் ரத்னா விருது வென்றுள்ளார்கள். 2007இல் தோனி, 1997இல் சச்சின் ஆகியோர் இந்த விருதை வென்ற கிரிக்கெட் வீரர்கள் ஆவர். இவர்களுக்கு பின் மூன்றாவதாக இந்த விருதை வெல்லும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கோலி.
கோலி இந்த ஆண்டு சிறப்பாக ரன் குவித்து வருகிறார். அவரது பேட்டிங் சராசரி இந்த ஆண்டு மிகவும் அதிகம். அதே போல, டெஸ்ட் போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதை கணக்கில் கொண்டு அவருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
மீராபாய் சானு பளுதூக்குதல் வீராங்கனை ஆவார். அவர் கடந்த வருடம் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்றார். காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் காயம் காரணமாக அவர் பங்கேற்கவில்லை. எனினும், அவரது மற்ற சாதனைகளுக்கே அவருக்கு கேல் ரத்னா விருது வழங்க அனைத்து உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த இரண்டு விருதுகள் மட்டுமின்றி, அர்ஜுனா விருதுகள், துரோணாச்சாரியா விருதுகள், தியான் சந்த் விருதுகள் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆசிய கோப்பையில் பதக்கம் வென்ற பலர் இடம் பெற்றுள்ளனர்.