ஒலிம்பிக்கில் 2 முறை தங்கம் வென்றவர்
அமெரிக்காவை சேர்ந்த பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயண்ட் அமெரிக்காவின் கூடைப்பந்து கூட்டமைப்பின் முக்கிய வீரர். 41 வயதான பிரயண்ட் ஒலிம்பிக்கில் பங்கேற்று இரண்டு முறை தங்கம் வென்றவர்.
20 ஆண்டுகள் விளையாடி சாதனை
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அணிக்காக 1996 முதல் 2016 வரை விளையாடிய இவர், 5 முறை என்.பி.ஏ. சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை புரிந்துள்ளார்.
கோப் பிரயண்ட் உயிரிழப்பு
இதனிடையே லாஸ் ஏஞ்சல்சிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் கோப் பிரயண்ட் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணம் செய்த அவரது மகள் மற்றும் 7 பேர், விமானி உள்ளிட்டவர்களும் உயிரிழந்துள்ளனர்.
திடீரென தீப்பிடித்து விபத்து
லாஸ் ஏஞ்சல்சின் அருகில் கலபசாஸ் காட்டுப்பகுதியில் வானில் சென்றுக் கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்து எரிந்து விழுந்தது. இதையடுத்து உடனடியாக அங்கு சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் இந்த விபத்தில் யாரும் உயிர்பிழைக்கவில்லை என்று உறுதி செய்தனர்.
பல்வேறு துறையினர் அதிர்ச்சி
கூடைப்பந்தாட்டத்தின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கடந்த 2016ல் ஓய்வு பெற்ற கோப் பிரயண்ட்டின் அகால மரணத்திற்கு உலகெங்கிலும் கூடைப்பந்து ரசிகர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
|
வாழ்க்கை நிலையற்றது என வருத்தம்
கோப் பிரயண்டின் உயிரிழப்பு குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள கேப்டன் விராட் கோலி, வாழ்க்கை நிலையற்றது என்று வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் பிரயண்டை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
"விளையாட்டின் துக்க தினம்"
கோப் பிரயண்டின் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, உலக விளையாட்டின் துக்க தினம் என்று வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் பிரயண்டின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
பிரயண்டிற்கு அஞ்சலி
இதனிடையே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய காட்டுப்பகுதிக்கு அருகில் குழுமிய ஏராளமான பிரயண்ட் ரசிகர்கள் அவரது ஜெர்சியை அணிந்துக் கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.