ஜனவரியில் உயிரிழப்பு
பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரையண்ட் தன்னுடைய 20 ஆண்டுகள் என்பிஏ கேரியரில் லேக்கர்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடிய பெருமைக்குரியவர். பிரையண்ட்டும் அவரது மகள் ஜியானாவும் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் உயிரிழந்தனர். இவர்களுடன் பயணம் மேற்கொண்ட மேலும் 8 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
ஒலிம்பிக்கில் 2 முறை தங்கம் வென்றவர்
லேக்கர்ஸ் அணிக்காக விளையாடிய பிரையண்ட், 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். கடந்த 2008 பீஜிங் மற்றும் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் தன்னுடைய அணிக்காக விளையாடி தங்கம் வென்றுள்ளார். மேலும் சர்வதேச அளவில் பல்வேறு பட்டங்களை வென்றுள்ள பிரையண்ட், ரசிகர்களின் இதயங்களையும் வென்றவர்.
தோளை அலங்கரித்த டவல்
கடந்த 2016 ஏப்ரல் 13ல் உதா ஜாஸ் அணிக்கு எதிராக தனது இறுதிப்போட்டியை விளையாடிய பிரையண்ட், 60 புள்ளிகளை பெற்று தன்னுடைய அணி 96க்கு 101 புள்ளிகளுடன் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தார். இந்த இறுதிப்போட்டியின் போது ரசிகர்களின் மத்தியில் நெகிழ்ச்சியுடன் உரையாடினார் பிரையண்ட். அப்போது அவரது தோளை அலங்கரித்தது ஒரு டவல்.
பல்வேறு முறை ஏலம்
இதையடுத்து அந்த டவல் ரசிகர் ஒருவரின் கைகளில் சிக்கி, அதன்பின்பு பலமுறை ஏலத்தில் விடப்பட்டது. இந்நிலையில், நேற்று அந்த டவல் மீண்டும் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் இந்திய மதிப்புப்படி 24.89 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது. மேலும், பிரையண்டின் இறுதிப்போட்டியின் உபயோகிக்கப்பட்ட டிக்கெட்டுகள் இரண்டும், ஏலத்தில் வெற்றி பெற்றவருக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.