புனே: புரோ கபடி லீக் சீசன் 5ல் தனது கடைசி ஆட்டத்தில் இன்று விளையாட உள்ள தமிழ் தலைவாஸ் அணி, வெற்றியுடன் இந்த சீசனில் இருந்து விடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் சீசன் 5 போட்டிகளின் முதல் சுற்று ஆட்டங்கள் முடியும் நிலையில் உள்ளது. இந்த சீசனில் முதல் முறையாக களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணி, இன்று இரவு நடக்கும் கடைசி ஆட்டத்தில் பட்னா பைரேஸ்ட் அணியை சந்திக்க உள்ளது.
தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு தயாராக உள்ள பட்னா பைரேட்ஸ் அணி, 20 போட்டிகளில் 10 வெற்றி, 6 தோல்வியுடன், 67 புள்ளிகளைப் பெற்று, பி பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டது.
சென்னையில் நடந்த 6 ஆட்டங்களில் தோல்வியடைந்த தமிழ் தலைவாஸ், யு மும்பா அணிக்கு அதிர்ச்சி கொடுத்து அபாரமாக வென்றது.
இந்த நிலையில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் 34-30 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தது. வழக்கம்போல், கடைசி நேர சொதப்பல், தமிழ் தலைவாஸ் தோல்விக்கு காரணமானது.
தமிழ் தலைவாஸ் அணி 21 போட்டிகளில் 5 வெற்றி, 14 தோல்வி, 2 டை செய்து, 41 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் பி பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது.
முதல் சீசனில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், இரண்டாவது சீசனில் யு மும்பா அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றன. மூன்றாவது மற்றும் நான்காவது சீசனில் பட்னா பைரேட்ஸ் சாம்பியனானது.
இந்த சீசனில், குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், புனேரி பல்தான் ஆகியவை ஏ பிரிவில் இருந்தும், பெங்கால் வாரியர்ஸ், பட்னா பைரேட்ஸ் அணிகள் பி பிரிவுில் இருந்தும் அடுத்த சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன. வரும் 20ம் தேதி முதல் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன.